( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அமைவாக நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக ரூபாய் 18 ஆயிரம் (பதினெட்டாயிரம்) வழங்கும் நிகழ்வு இன்று(22) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி எச்.ஏ.அலி சப்றி, இணைப்புச் செயலாளர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.வாஹீட், மீரா.எஸ்.இஸ்ஸதீன், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.திரவியராஜ், பிரதம கணக்காளர் ஏ.எம்.நிசாம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மாதமொன்றுக்கு ரூபாய் மூவாயிரம் படி ஆறுமாதங்களுக்கான தொகை ரூபாய் 18 ஆயிரம் பெறுமதியான காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
உதவிகள் வழங்கப்பட்ட 54 மாற்றுத் திறனாளிகளுக்கும் சுமார் 9,72 ,000.00 ( ஒன்பது இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் ) ரூபாய்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சர் ஹசன் அலி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'மாற்றுத் திறனாளிகள் என்போர் குறைவு உடையவர்கள் என்பது கருத்தல்ல. மறுமை வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சாதாரணமான எம்மை விட மாற்றுத் திறனாளிகள் மேன்மையானவர்கள். அவர்களைப் பராமரிப்போர் இறைவனிடத்தில் உயர்ந்தவர்கள். இந்த அரசாங்கம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத்திரமல்லாது 70 வயதிற்கு மேற்பட்ட எல்லா வயோதிபர்களுக்கும் மாதமொன்றிற்கு ரூ.2000 வழங்கவுள்ளது. இவைகளுக்காகவும் நாம் இந்த அரசாங்கத்திற்கு நன்றி செலுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.



