நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் போட்டியிட தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ்,இரண்டு மாவட்டங்களில் மட்டும் தனித்து போட்டியிடவும் முடிவெடுத்துள்ளது. மக்கள் வழங்கிய ஆணையினை காப்பாற்றவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அறிவித்தலை நேற்று உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சி ஒன்றினை அமைப்பதற்கான ஒரு கூட்டு ஒப்பந்த தீர்மானத்துக்கு அமைய இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.
ஜனவரி 8ஆம் திகதி மக்களுடன் நாம் மேற்கொண்ட உடன்படிக்கையை மேலும் பலப்படுத்த வேண்டும். அதற்கு எமக்கு இருக்கும் ஒரே வழிமுறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்ப்பதேயாகும். ஆகவே இதுவரை எம்மால் செய்து கொள்ளமுடியாத உடன்படிக்கைகளையும் , வென்றெடுக்க முடியாத மக்களின் அபிலாசைகளையும் இதற்குப் பிறகும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து வென்றெடுப்போம். அதேபோல் ஏனைய சிறுபான்மை தலைமைகளுடன் பொது இணக்கப்பாட்டை மேற்கொண்டு நாட்டை வலுப்படுத்துவோம்.
இந்த கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு மாவட்டங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதுடன் ஏனைய குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.
இதில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் வன்னி மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். அதேநேரம் ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் போட்டியிடவுள்ளோம்.
இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மக்களின் யுகப் புரட்சியுடன் நாம் உருவாக்கிய நல்லாட்சியை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் நாம் தேர்தலில் களம் இறங்குகின்றோம். எம்மை பொறுத்த மட்டில் நல்லாட்சியை உருவாக்க, இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்வதற்காக பெரும் தியாகத்தோடு கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எமக்குக் கொடுத்த ஆதரவை சில பிற்போக்கு சக்திகள் முறியடிக்க முயற்சித்து வருகின்றன.
எந்த ஆட்சியாளரை தோற்கடிக்க நாம் பாரிய முயற்சிகளை எடுத்தோமோ அந்த ஆட்சியை மீண்டும் பின்கதவால் கொண்டுவரும் முயற்சிகளை எதிர்க்கட்சியினர் செய்து வருகின்றனர் என்பது மிகப்பெரிய துரதிஷ்டம்.
எனவே அதை தடுக்கும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம். இதில் எம்முடன் கைகோர்க்கும் வகையில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவடங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றது.
மேலும் எங்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய நல்லட்சிக்கான தேசிய முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்முடன் இணைந்து மரச் சின்னத்தில் போட்டியிடுவதுடன் , திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சினத்தில் எமக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு ஆசனங்களில் ஒன்றை அவர்கள் சார்பில் விட்டுக் கொடுக்கும் உடன்பாட்டை எட்டியுள்ளோம்.
அந்த அடிப்படையில் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய ஆட்சியை உருவாக்குவதில் பங்களிப்பு செய்த பல்வேறுபட்ட அமைப்புகளில் இவர்களும் பிரதானமான அமைப்பாகும். இந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைவது பரந்துபட்ட அளவில் எதிர்காலத்தில் முழு முஸ்லிம் சமூகத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு முன் முயற்சியாக நாம் இதை பார்க்கின்றோம்.
இந்த நடவடிக்கையின் மூலம் நாம் இருவரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்ற நம்பிக்கையோடு இந்த தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
virakesary.lk
