பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களின் பெயர்களை இன்று (20) வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அரச அச்சக திணைக்களத்திற்கு இன்று (20) அனுப்பிவைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள், தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் கிடைத்ததும் அதனையும் வர்த்தமானியில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
