விகிதாசார பிரதி நிதித்துவ முறையில் நடை பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல்களில் சிறுபான்மை கட்சிகள் நன்மையடைந்தாலும் இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதி நிதித் துவம் பாரிய அளவு வீழ்ச்சியடையலாம்.
- கடந்தகால தேர்தல் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொன்டு நோக்கும் போது அனேகமாக இந்தத் தேர்தல் முடிவுகள் 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை ஒத்ததாக அமையலாம்.
- 2001 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய தேசிய கட்சி 109 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 16 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு 5 ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் பெற்றனர். அதன்படி ஐக்கிய தேசிய கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து 114 ஆசங்களுடன் ஆட்சியமைத்தது.
2015 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பின்வரும் பண்புகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
1. தேர்தல் களம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக உள்ளது.
2. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் மாவட்ட ரீதியாக 20 தொடக்கம் 30 வீதம் வீழ்ச்சியடையலாம்.
3.கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த 62 இலட்சம் வாக்குகளில் சுமார் 48 இலட்சம் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் 7 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணிக்கும் 6 இலட்சம் வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் எஞ்சிய வாக்குகள் ஏனைய சிறு கட்சிகளுக்கும் கிடைக்கப் பெறும்.
4. தேர்தல் களத்தில் வீழ்ச்சி கண்டிருந்த ஜே.வி.பி.யின் வாக்குப் பலம் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரிக்கலாம்.
5. முஸ்லிம் கட்சிகளின் வாக்குகள் குறைவடைந்து அல்லது சிதைவடைந்து முஸ்லிம் பிரதி நிதித் துவம் குறைவடையலாம்.
6. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 83 வீதமாக இருந்த வாக்களிப்பு வீதம் 75 வீதம் குறைவடையலாம். வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக்கொள்ளும் வாக்காளர்கள் 95 வீதமானோர் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தவர்களாவர்
உத்தேச தேர்தல் முடிவு
நாடுபூராக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்ட தேர்தல் முடிவு அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சி 110 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 80 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 16 ஆசங்களையும் இலங்கை தமிழரசுக்கட்சி 16 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும் ஜனநாயக கட்சிக்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனமும் கிடைக்கப் பெறும்.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சியை முதன்மையாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவுடனான பலமிக்க ஒரு அரசை அமைக்க முடியும். இந்த கூட்டணியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர அணியில் வெற்றிபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களும் சுமார் 20 பேர் அளவில் இணைந்துகொள்ளவுள்ளனர். இதன்படி அடுத்த பாராளுமன்றம் முக்கியமான விடயங்களில் 3 இல் 2 பெரும்பான்மை ஆதரவைப் பெறக் கூடிய சக்தி மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம் பிரதிநிதித்துவம்
கொழும்பு, களுத்துறை , கண்டி, வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான நிலைமை காணப்படுகின்றது. அதே நேரம் தொடர்ந்தும் புத்தளம், குருணாகல் மாவட்ட பிரதி நிதித்துவம் கேள்விக் குறியாகவே உள்ளது.
2 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் நிலவும் மும்முனைப் போட்டி காரணமாக அங்கு இரண்டு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தைப் பெறுவதும் சந்தேகமாக உள்ளது. அதாவது, உத்தேச தேர்தல் முடிவுகளின் படி திகாமடுள்ள மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 ஆசனங்களையும், தமிழரசுக்கட்சி 1 ஆசனத்தினையும் பெறும் வாய்ப்பு உள்ளது.
இங்கு தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுமார் 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றாலும் மாவட்டத்தின் கூடிய மீதிக்கான ஆசனம் சுமார் 55 ஆயிரம் வாக்குகளைப் பெறும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப் பெறுகின்றமையினால் அந்த வாக்குகள் பயனற்றுப் போகும்.
அதே போல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அம்பாறை பகுதியில் சுமார் 70 ஆயிரம் சிங்கள வாக்குகளைப் பெறுகின்ற நிலையில் 25 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெறும் முஸ்லிம் வேட்பாளர்களால் எதிர்கொள்ள முடியாமல் போகும்.
இந்த நிலையில் மாவட்டத்தின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் நான்கு ஆசனங்களில் அதிகூடிய ஆசனங்களைப் பெற முயற்சிக்குமிடத்து முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை அதிகரிக்க முடியும்.
அடுத்த பிரதான மாவட்டமான மட்டக்களப்பில்முஸ்லிம்கள் 3 பிரதான கட்சிகளில் பிரிந்து போட்டியிடுகின்ற நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் தலா ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கான சூழல் நிலவுகின்றது.
வன்னியைப் பொறுத்தவரை இம்முறை சுமார் 10 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறாமை காரணமாக அங்கு முஸ்லிம்களின் வாக்குப் பலம் குறைந்துள்ளது. இந் நிலையில் ஒரு உறுப்பினரே தெரிவு செய்யப்படலாம்.
அதேநேரம் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்ற காரணத்தினால் அந்தக் கட்சியில் முதன்மை வகிக்கும் சிங்கள வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளது.
கொழும்பு
கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஐ.தே.கட்சியில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் கட்சிக்குள் நிலவும் போட்டித் தன்மைகள் காரணமாக சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களே தெரிவு செய்யப்படலாம். இந்தப் பின்னணியில் ஒருவர் அல்லது இரு முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது.
-vidivelli.lk

