(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)
நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் காத்தான்குடி பிரதேச பல கட்சி வேட்பாளர்களுடனும் தேர்தல் கால நடைமுறை ஒழுங்கு தொடர்பில் எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்திருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தினர்மீது, குறித்த ஒப்பந்தத்தில் இருந்து மீறிய முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு.கூட்டமைப்பில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பழிவாங்கும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தத்தில் இருந்து மீறியமைக்காக, முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தமது ஜமாஅத் வழங்கிய ஆதரவை முற்றாக விலக்கிக் கொள்வதாகவும், ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்ட அவருக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் கடந்த 14ம் திகதி வெள்ளிக்கிழமை விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததை இணையதள வாசகர்களும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களும் அறிவார்கள்.
இந்த அறிக்கையினால் வெகுவாக ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய தௌஹீத் ஜமாஅத் என்பது ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், தேர்தல் பிரச்சாரக் காலம் முடிவடைந்த பின்னர் 15ம் திகதி சனிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தி தமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துள்ளனர் என்றும், இவர்களின் பள்ளிவாசலில் சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகள் பாவிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறையீடு செய்திருந்தார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று சனிக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணையொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது சமூகமளித்த தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்களும், நிர்வாகத்தினரும் பின்வருமாறு தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளனர்.
1. எமது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு சட்டவிரோதமான அமைப்பு என்றால், இச்சட்டவிரோத அமைப்புடன் முறைப்பாட்டாளரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்வந்தார்?
எமது அமைப்பை அங்கீகரித்து காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் உள்ளிட்ட பல பிரமுகர்களும், அரச நிறுவனங்களும் கடந்த காலங்களில் எம்மோடு தொடர்பாடல்களை வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கின்றன. நாம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை முறைப்பாட்டாளருக்கு பாதகமாக இருந்ததன் காரணமாகவே அவர் இப்போது எமது அமைப்பைச் சட்டவிரோத அமைப்பு எனக் குற்றஞ்சாட்டிப் பழிதீர்க்க முற்பட்டிருக்கின்றார்.
2. குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளவாறு நாம் 15ம் திகதி சனிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு எதனையும் நடாத்தவில்லை. 14ம் திகதி வெள்ளிக்கிழமைதான் ஒப்பந்தம் செய்து கொண்ட ஏனைய வேட்பாளர்களுடன், அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், அக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க ஹிஸ்புல்லாஹ் சமூகமளிக்கத் தவறியது பற்றியும் நாங்கள் விளக்கமளித்தோம். அதனை அன்று மாலை கபுறடி வீதியில் நடைபெற்ற இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போதும் அவர்கள் பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியில் ஒளிபரப்புச் செய்து காண்பித்தனர். எனவே அவரது குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.
3. எமது பள்ளிவாயலில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் முறைப்பாட்டாளரால் ஏற்கனவே வழங்கப்பட்டவையே ஆகும். எனவே சட்டவிரோதமாக நாங்கள் ஒலிபெருக்கிகள் பாவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுவாராயின், அச்சட்டவிரோதச் செயற்பாட்டிற்கு ஒலிபெருக்கிகளை வழங்கி ஊக்குவித்த அவரையே நீங்கள் விசாரித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தைரியமாக தேசிய தௌஹீத் ஜமாஅத் நிர்வாகத்தினர் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.


