மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் காலங்களில் பிரதேசவாதமும் இனவாதமும் பெரும் சாபக்கேடாக உருவெடுப்பது வழக்கமாகும். ஒவ்வொருவரும் அடுத்தவர்களைக் குற்றம்சாட்டிக் கொண்டு இனவாதத்தால் இனவாதத்தை வளர்க்கிறார்கள். பிரதேசவாதத்தால் பிரதேசவாதத்தை வளர்க்கிறார்கள். நாம் சொல்வதெல்லாம் பிரதேசவாதத்தை சகோதரத்துவத்தால் வெற்றிகொள்ள வேண்டும், இனவாதத்தை மனித நேயத்தால் வெற்றிகொள்ள வேண்டும். இதுதான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் கொள்கையும் செயற்பாடுமாகும் . அந்த மனித நேயத்தை உருவாக்குகின்ற புதிய தொடக்கமாகவே நாம் இத் தேர்தலை நோக்குகிறோம் என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவருடனான நேர்காணலின் முழுவிபரம் வருமாறு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொதுத் தேர்தலில் என்ன அடிப்படையில் போட்டியிடுகிறது?
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இம்முறை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் மற்றுமொரு கூட்டணியாகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு உடன்பாட்டின் அடிப்படையில் இணைந்து இரண்டு மாவட்டங்களில் போட்டியிடுகிறது. இந்த உடன்பாட்டின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தின் கீழ் நானும் கவிஞர் எஸ்.நளீமும் போட்டியிடுகிறோம். அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் டாக்டர் ஸாஹிர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் சார்பில் போட்டியிடுகிறார்.
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நீங்கள் என்ன அடிப்படையில் இம் முறை இணைந்து போட்டியிடுகிறீர்கள்?
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமிடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதில் 11 அம்சங்களில் இரு கட்சிகளுக்குமிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தமேயாகும்.
நாம் மு.கா.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறோம் என்பதற்காக எமது நல்லாட்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் எந்தவித விட்டுக் கொடுப்புகளையும் செய்யவில்லை. மாறாக நல்லாட்சியை முன்னெடுப்பதற்கான கூட்டு முயற்சியே இது என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.
''அரசியல் என்பது செம்மையான நேர் கோட்டுப்பாதை கிடையாது. கூட்டணிகளும் ஒப்பந்தங்களும் அணிசேர்வுகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால் அந்த ஒவ்வொரு கூட்டணிகளும், ஒப்பந்தங்களும் அணி சேர்வுகளும், நமது இலட்சியத்தை நோக்கி நம்மை நகர்த்துவதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அது சரியான பாதையாகும். இலட்சியத்தை விட்டும் நம்மை பின்னகர்த்துவதாக இருந்தால் அது பிழையான பாதையாகும்'' என்ற யதார்த்தத்தை நாம் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறோம். இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் எமது அடிப்படைக் கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாது சமூக நலன் அடிப்படையிலான இந்தக் கூட்டணியை ஒரு பொது இலட்சியத்திற்காக நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம்.
இங்கு முஸ்லிம் காங்கிரஸில் நாம் இணையவில்லை. எங்களுடைய கட்சியில் அவர்கள் இணையவுமில்லை.இரண்டு கட்சிகளும் தனித்துவமான அடையாளங்களைக் கொண்ட இரண்டு நிறுவனங்களாகும். இரண்டும் ஒரு பொது நோக்கத்தில் இணைந்துள்ளன. இது நாம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலும் மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்களது வெற்றி வாய்ப்பு குறித்து?
இன்ஷா அல்லாஹ் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் மக்கள் இன்று தேசிய அளவிலும் சரி மாவட்ட மட்டத்திலும் சரி மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை முன்னின்று நடத்திய ஒரு அமைப்பாக , முன்னணியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விளங்குகிறது.
முதல் தடவையாக எமது பிரதிநிதிகள் இரு மாவட்டங்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இன்ஷா அல்லாஹ் மக்களின் விருப்பத்திற்குரிய தெரிவாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடைய பிரதிநிதிகள் நிச்சயமாக இருப்பார்கள். எனவேதான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நாம் நம்புகிறோம்.
ஐ.தே.முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதியாக நம்புகிறீர்களா?
நிச்சயமாக ஐ.தே.முன்னணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும். கடந்த ஜனவரி 8 இல் ஏற்பட்ட மாற்றம் கடந்த ஆறு மாதங்களுக்குள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் ஓர் அராஜக ஆட்சி நிலைமை தோன்றுமோ என்ற அச்ச நிலைமை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 8 இல் தொடங்கிய மாற்றத்தை நிறைவு செய்ய வேண்டியது ஒரு தேசியக் கடமையாக மாறியிருக்கிறது. அதனைச் செய்வதற்குரிய சிறந்த சந்தர்ப்பமாகவே நாட்டு மக்கள் இந்தத் தேர்தலை எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த மாற்றத்தை பாதுகாப்பதற்கு தலைமை வகிக்கின்ற அணியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறது. அதில் சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்ட பொது முன்னணியும் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் இந்த முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கின்ற வாய்ப்பு இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் களத்திலிறங்கியிருக்கிறாரே?
மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். இந்த நாட்டின் வரலாற்றில் அவ்வாறு நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வர நினைப்பதென்பது ஒரு துரதிஷ்டவசமான புதிய வரலாறாகும்.
அவர் வெறுமனே பாராளுமன்றத்திற்கு வருவதோடு மாத்திரமல்லாது மக்கள் ஏற்படுத்திய மாற்றத்தினை சிதைப்பதற்கு அவரது தலைமையிலான குழு முயல்கிறது என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு அவர் வருவது ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே அதனை நாம் முறியடிக்க வேண்டும். அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு முஸ்லிம்கள் உட்பட எவரும் வாக்களிக்கக் கூடாது.
மட்டக்களப்பில் போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ் தான் மஹிந்த தரப்பிலில்லை என்றும் மைத்திரி அணியிலேயே இருப்பதாகவும் சொல்கிறாரே?
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காமல் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கு இறுதி நேரம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டவர்தான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ். இப்போது அவர் தான் மைத்திரி அணியில்தான் போட்டியிடுவதாக சொல்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும்.
மகிந்த தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட ஹிஸ்புல்லா தொடர்ந்தும் மகிந்தவின் விசுவாசியாகவே செயற்பட்டார். மைத்திரியினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதித்திட்டத்திலும் கையெழுத்திட்டவர்தான் இவர். இப்போது மகிந்த ராஜபக்ஷவை அடுத்த நாடாளுமன்றத்தில் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காகத்தான் இந்தத் தேர்தலிலே அவரும் போட்டியிடுகின்றார். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
மஹிந்தவிற்கு எதிராக நாம் எவ்வளவு பொறுப்புடன், தேசப்பற்றுடன் வாக்களித்து அவரை தோற்கடிக்கச் செய்திருந்தோமோ அதே போன்று இந்த வெற்றிலைச் சின்னத்திலே போட்டியிடுகின்றவர்களையும் நாம் தோற்கடிக்காவிட்டால், நாம் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் தள்ளப்படுவோம் என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
(நன்றி வீரகேசாி வார வெளியீடு)
