Featured Home (TOP)

Recent Comments

Thursday, August 6, 2015

avathani Media Network

அபாண்டக் குற்றச்சாட்டுக்கான அபராதத் தொகையைச் செலுத்த முற்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி!

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

கடந்த மாதம் 23ம் திகதியன்று கல்லடிப் பாலத்தடியில் வைத்து காத்தான்குடிப் போக்குவரத்துப் பொலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நான், தவறான முறையில் பயணித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், எனது சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களால் வழங்கப்பட்ட பதில் சாரதி அத்தாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நீதிமன்றத் திகதிக்கமைவாக இன்று 05ம் திகதி காலை 09:00 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்குச் சமூகமளித்தேன்.

நண்பகல் 12:00 மணியளவில் மோட்டார் போக்குவரத்துப் பொலீசாரால் மன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சகல குற்றப்பத்திரிகைகளும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் எனது பெயர் அழைக்கப்படாதது குறித்து நான் நீதிமன்றத்தில் முன்தோன்றி நீதிபதி அல்ஹாபிழ். என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களிடம் இதுபற்றி முறையிட்டேன்.

அவர் என்னிடமிருந்த பதில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பார்வையிட்டார். அதில் இன்றைய தினமே நீதிமன்றத் திகதியாகவும், எனது பதில் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் நாளாகவும் இருப்பதை அவதானித்து, நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த பொலீசாரிடம் காத்தான்குடிப் பொலீசார் எங்கே? எனக் கேட்டார்.

அதற்கவர்கள், எவரும் இல்லை என பதிலளித்தனர். உடனே காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து அவரை நீதிமன்றத்திற்கு வரவழைக்குமாறு பணித்தார்.

சற்று நேரத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. வெதகெதர நீதிமன்றத்திற்குச் சமூகமளித்தார். அவர் வந்த நேரத்தில் மன்றில் வேறோர் வழக்கின் விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. சற்று நேரம் அவர் மன்றில் பிரசன்னமாகி இருந்து விட்டு பின்னர் வெளியில் சென்றதையடுத்து ஒரு மோட்டார் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி என்னை மன்றிலிருந்து வெளியே வருமாறு சைகை மூலம் அழைத்தார்.

நான் வெளியில் வந்ததும் எனது பிரச்சினை பற்றி அவர் வினவினார். அவருக்கு பதிலளித்த நான், வீதியால் வந்த என்னை ட்ரஃபிக் பொலிசார் தடுத்து நிறுத்தி எனது ட்ரைவிங் லைசன்ஸை வாங்கிக் கொண்டு, 500 ரூபா அபராதம் செலுத்தி விட்டு வருமாறு கூறினர். நான் தவறாகப் பயணிக்கவில்லை என்பதால் அபராதப் பணம் செலுத்தாமல் இந்த பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளவாறு இன்று நீதிமன்றத்திற்கு வந்தேன். மன்றில் எனது பெயர் அழைக்கப்படவில்லை. ஒன்றில் இன்று மன்றில் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள். அல்லது இன்றுடன் காலாவதியாகும் பதில் அனுமதித் திகதியை நீடித்துத் தாருங்கள். இதுதான் எனது பிரச்சினை என்றேன்.

அதற்கிணங்கிய அவர் எதிர்வரும் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை தீகதியை நீடிப்புச் செய்து பக்கத்தில் நின்ற காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கையொப்பமும் பெற்றுத் தந்ததுடன், மாலை 05:30 மணிக்கு காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பதிகாரியின் பதவி முத்திரையை அதில் பொறித்துப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.

அதன்படி மாலை 05:30 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்றேன். ஒரு பொலிஸ்காரர் என்ன விடயம் எனக் கேட்டார். விடயத்தைக் கூறினேன். என்னிடமிருந்த பதில் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு மோட்டார் போக்குவரத்துப் பிரிவுக்குச் சென்றார். சில நிமிடத்தில் அப்பிரிவுக்கான பொறுப்பதிகாரியின் பதவி முத்திரையைப் பதித்துக் கொண்டு வந்த அவர், நிலையப் பொறுப்பதிகாரியிடம் அதனைக் காண்பித்துவிட்டு வருவதாகக்கூறி, அவரது அலுவலகத்திற்குச் சென்றார். நான் வெளியில் நின்றிருந்தேன்.

சில நிமிடத்தில் வெளியில் வந்த அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர், என்னிடம் தரப்பட்ட 500 ரூபாய் அபராதம் செலுத்தும் பத்திரத்தைத் தரும்படி கேட்டார். அதனைக் கொடுத்தேன். பெற்றுக் கொண்டு நிலையப் பொறுப்பதிகாரியின் அறைக்கு மீண்டும் சென்றார். நான் காத்திருந்தேன்.

பின்னர் என்னை அவ்வறைக்கு வருமாறு அழைத்தார். நான் உள்ளே சென்றேன். அங்கு நின்றிருந்த மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொலீசார் ஒருவரிடம் என்னிடமிருந்து பெறப்பட்ட அபராதம் செலுத்தும் பத்திரத்தையும், 500 ரூபா பணத்தையும் கையளித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, எனது அசல் சாரதி அனுமதிப்பத்திரத்தை என்னிடம் நீட்டினார்.

அதனை வாங்க மறுத்த நான், என்னிடமும் பணம் இருக்கிறது. ஆனால் அநியாயமாக ஒரு ரூபாவும் அபராதம் செலுத்த மாட்டேன். என்மீது நீங்கள் வழக்கைப் பதிவு செய்யுங்கள். அதுவரை எனது பதில் அனுமதிப்பத்திரத்தை காலநீடிப்புச் செய்து தாருங்கள் என்று கூறினேன்.

அவர் சுமார் பத்து நிமிடம் வரை என்னைச் சமாதானப்படுத்தும் வகையில் எதோவெல்லாம் கூறனார். அவரது சமாதானத்தை முற்றாக ஏற்க மறுத்த நான் எனது கோரிக்கையில் உறுதியாக இருந்தேன். எனது பதில் அனுமதிப் பத்திரத்தை கால நீடிப்புச் செய்து தராவிட்டால் இன்றுடன் நான் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதையே நிறுத்திக் கொள்கிறேன் எனக்கூறிக் கொண்டு எழுந்தேன். 

ஈற்றில் அவர் கால நீடிப்புச் செய்யப்பட்ட பதில் அனுமதிப்பத்திரத்தை என்னிடம் தந்தார். பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வரும் 11ம் திகதி என்மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுக்குரிய குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அன்றைய தினமும் நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்கவுள்ளேன்.

பொலீசாருக்கு பொதுமக்கள் பணம் கொடுத்து பிரச்சினைகளில் இருந்து விடுபட முயற்சிக்கும் இக்காலத்தில், பொலீசாரே பணம் கொடுத்து பொதுமக்களின் பிரச்சினைகளில் இருந்து விடுபட எத்தனித்த சம்பவம் இன்றுதான் எனது வாழ்வில் முதல்தடவையாகப் பதிவாகியுள்ளது. 

இதிலிருந்து சட்டத்தையும், ஒழுங்கையும் நாட்டில் நிலைநிறுத்த வேண்டிய பொலீசார் எப்படியெல்லாம் அதிலிருந்து நழுவிச் செயற்பட்டு பொதுமக்களை வீண் சிரமங்களுக்கு உள்ளாக்குகின்றனர் என்பது புலனாகின்றதல்லவா?


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :