முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நான் குரல் கொடுப்பதால் பொதுபலசேனா என்னைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது. இரத்தம் சிந்துவது எனக்குப் புதியதொன்றல்ல. பொதுபலசேனாவின் இனவாதத்திற்கு எதிராக எனது இறுதி மூச்சுவரை போராடுவேன் என நவசமசமாஜக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார்.
நாட்டில் இன ஐக்கியத்தை உருவாக்கும்வரை தான் ஓயப்போவதில்லை எனவும் அவர் சூளுரைத்தார்.
வட்டரக்க விஜித தேரர் வியாழன் இரவு கொழும்பு வாழைத்தோட்டம் அக்பார் ஒழுங்கையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தபோது தேரர்கள் சிலரினால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள பன்சலைக்குள் அடைத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
பலத்த காயங்களுக்குள்ளான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 72 ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையிலிருந்தும் தனது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறினார்.
இச் சம்பவம் தொடர்பில் ‘விடிவெள்ளி” வட்டரக்க விஜித தேரரைத் தொடர்பு கொண்டபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
வாழைத்தோட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் நான் தேர்தல் பிரசாரத்தில ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொதுபலசேனா அமைப்பின் 8 குருமார்கள் வந்து என்னை பலாத்காரமாக இழுத்துச் சென்று பக்கத்திலுள்ள பன்சலைக்குள் அடைத்துவைத்து தாக்கினார்கள். முஸ்லிம்களையும் என்னையும் சம்பந்தப்படுத்தி தூசன வார்த்தைகளால் ஏசினார்கள்.
இரவு 9 மணியளவில வாழைத்தோட்ட பொலிஸார் வந்து என்னையும் நஸீம் ஹாஜியாரையும் மௌலானாவையும் அழைத்துச சென்றார்கள். நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். மற்றைய இருவரும் வாக்கு மூலம்பெற்றுக் கொண்ட பின் விடுவிக்கப்பட்டனர்.
புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வைத்தியசாலைக்கு வந்து என்னிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டார். நான் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதை வேறு எவரும் எதிர்க்கவில்லை. பொதுபலசேனாவே எதிர்க்கிறது.
நாட்டில் இனவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும். பொதுபலசேனாவை இல்லாமற் செய்ய வேண்டும். இந்தப் பணிக்காக நான் இரத்தம் சிந்தி போராட்டங்களை நடத்துவேன். பொது பல சேனா தேரர்களின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அவர்கள் முஸ்லிம்களை ஆதரிப்பவர்களையும் எதிர்க்கிறார்கள்.
என்னைத் தாக்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பொதுபலசேனாவினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் பாதுகாப்பு வழங்குமாறும் தேர்தல் ஆணையாளரிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்தேன்.
எனது கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர்கள்தான் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கூறினார்.
நான் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்திலும் தாக்கப்பட்டேன். இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தாக்கப்பட்டேன். மஹிந்த அரசாங்கம் பொதுபலசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை இந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நான் எதிர்வரும் தேர்தலில் நவ சமசமாஜக் கட்சியில் போட்டியிடும் ஒரு வேட்பாளன். மரண பயத்துடனேயே தேர்தல் பிரசாரம் செய்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வேட்பு மனுவைக் கூட கச்சேரிக்கு சென்று கையளிக்கவில்லை. வேறு ஒரு இடத்தில் வைத்து கையொப்பமிட்டே அனுப்பி வைத்தேன்.
என்னால் பகிரங்கமாக எங்கும் நடமாட முடியாதுள்ளது. இது ஜனநாயக நாடு. எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இது எனது உரிமை. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வெளியே செல்ல முடியாத அச்ச நிலையில் நான் இருக்கிறேன்.
முஸ்லிம்களின் வாக்குகளால் ஒரு பௌத்த மதகுரு பாராளுமன்றம் செல்கிறார் என்றால் அது நானாகத்தான் இருக்கும் என்றார்.
