வலம்புரி கவிதா வட்டத்தின் 19வது கவியரங்கு வகவத் தலைவர் என் நஜ்முல் ஹுசைனின் தலைமையில் கடந்த பௌர்ணமி தினத்தன்று கொழும்பு அல்ஹிக்மா கல்லூரியில் கவிஞர் ஈழவாணன் அரங்கில் நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இலங்கைக் கவிஞர் திரு. பேனா மனோகரன் சிறப்பதிதியாக கலந்து தனது இலக்கிய உலக பிரவேசம் பற்றியும், வகவ கவிதைகள் குறித்தும், மறைந்த கவிஞர் ஈழவாணன் சிறப்பு குறித்தும் உரையாற்றினார்.
தான் அநுராதபுரத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றவன் என்றும், ஒரு கால்பந்தாட்ட வீரனாய் இருந்த தனக்கு இலக்கியமும் படைக்க முடியும் என்பதை அடையாளம் கண்டவர் அன்பு ஜவஹர்ஷாதான் என்றார். அன்பு ஜவஹர்ஷா அவர்களைத் தன்னால் என்றுமே மறக்க முடியாது என்றும், அவரை நன்றியுடன் நினைவு கூருதல் தனது கடமை என்றும் மேலும் குறிப்பிட்டார். தான் இந்தியாவுக்குச் சென்று பொலிஸில் கடமை புரிந்தபோதும், இலங்கையில் விதைக்கப்பட்ட தனது இலக்கிய ஆர்வம் என்றுமே மங்கவில்லை என்றார்.
'இன்று வகவத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளில் பொங்கிய உணர்ச்சிகளைப் பார்த்தபோது நான் மெய்ச்சிலிர்த்துப் போனேன். என் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்கிறேன் இவ்வாறான கவியரங்கொன்றினை தற்போது நான் வாழும் மதுரை நகரில்கூட அண்மைக் காலங்களில் கண்டு ரசிக்கவேயில்லை' என்றார்.
மேலும், திரு. பேனா மனோகரன் அவர்கள் உரையாற்றும் போது, கவிஞர் ஈழவாணன் அவர்களின் ஆளுமைகளைக் குறிப்பிட்டார். 'தினபதி' பத்திரிகையின் கவிதா மண்டலத்தில் தன்னை அறிமுகப்படுதியவர் கவிஞர் ஈழவாணனே என்று குறிப்பிட்டதோடு ஈழவாணன் மாத்தளையைச் சேர்ந்தவர் அங்கே புகழ்ப்பெற்ற நவாலியூர் சொக்கநாதன், கந்தவனம், ஆகியோருடன் கவிஞர் ஈழவாணனும் போற்றப்பட்டவர். பேராசிரியர் கைலாசபதி, கவிஞர் இ.முருகையன் போன்றோர் ஈழவாணனைப் பற்றி மிகவும் சிலாகித்து தமது நூல்களிலே குறிப்பிட்டுள்ளார்கள். அவரது 'அக்கினிப் பூக்கள்' கவிதைத் தொகுதி இலக்கிய உலகில் தனியிடத்தைப் பிடித்தது. அவர் நடத்திய 'அக்னி' இதழிலும் தனது கவிதைகளையும் அவர் பிரசுரித்தார்' என்றார்.
தலைவர் என் நஜ்முல் ஹுசைனின் தலைமையில் நடந்த இவ்வரங்கில் கவிஞர் பேனா மனோகரன் தன்னால் வெளியிடப்பட்ட நூலினை வகவத்திற்குக் கையளித்ததோடு வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் வகவக் கவிஞர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் சிலவற்றை திரு. பேனா மனேகரனுக்குக் கையளித்தார்.
திடீரென இறையடிச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், இலக்கியவாதியுமான திருமதி சாந்தி சச்சிதானந்தன் நினைவுக் கூரப்பட்டார்.
இலக்கிய வித்தகர் கவிஞர் மேமன் கவியின் தலைமையில் மிகவும் விறுவிறுப்பான கவியரங்கம் நடைபெற்றது. இக் கவியரங்கில் கவிஞர்கள் வதிரி சி.ரவீந்திரன், கலைவாதி கலீல், எம்.பிரேம்ராஜ், எஸ்.ஜேசுதாஸ், போறுத்தொட்ட ரிஸ்மி, தமிழ்த்தென்றல் அலி அக்பர், கவிக்கமல் ரஸீம், மட்டக்களப்பு லோகநாதன், இளநெஞ்சன் முர்ஷிதீன், வெளிமடை ஜஹாங்கீர், கலாவிஸ்வநாதன், வெலிப்பன்னை அத்தாஸ், ஈழகணேஷ் ஆகியோர் வித்தியாசமான கவிதைகளைப் பாடினர். உணர்ச்சிப் பொங்கவும், அங்கதச் சுவையோடும் வெளிப்பட்ட கவிதைகள் பிரதம அதிதியினதும், சபையினதும் பாராட்டைப் பெற்றன.
சபையை பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத், உடுவை எஸ். தில்லை நடராஜா, திருமதி தேவி மனோகரன், கே.எஸ்.சிவகுமாரன், சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி, சமூகஜோதி எம்.ஏ.ரபீக், ரவூப் ஹசீர், எம்.எஸ்.எம்.சாஹிர், சனா எம்.யெஹ்யா, கே.ரஹ்மான், எம்.எஸ்.இப்ராஹிம், கவிநேசன் நவாஸ் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
அடுத்த கவியரங்கத் தலைவராக இளநெஞ்சன் முர்ஷிதீன் அறிவிக்கப்பட்டார்.


