அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான நிந்தவூர், காரைதீவு பகுதிகளில் அதிகளவான கீரி மீன்கள் கரைவலைகளில் அகப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று நிந்தவூரில் ' ஸ்டாhர் 'எனும் மீனவர் குழுக்களுக்கு சுமார் ரூபாய் முப்பது இலட்சம் பெறுமதியான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. இதே போன்று நிந்தவூரிலும், காரைதீவிலும் பத்துக்கு மேற்பட்ட மீனவர் குழுக்களுக்கு சுமார் ரூபாய் ஒன்றரைக் கோடி மதிக்கத்தக்களவு கீரி மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அளவுக்கதிகளவு மீன்கள் ஒரே நேரத்தில் பிடிபட்டுள்ளதால் மீன்களின் விலை மிகக் குறைந்துள்ளதாகவும், இதனால் மீன்கள் பழுதுபடாமல் பாதுகாப்பதற்காக குளிரூட்டுவதிலும், உப்புப் போடுவதிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
மீன்கள் அதிகளவில் பிடிபட்டுள்ளதனால் மீனவர் மனங்களில் ஆனந்தம் பொங்குவதையும், அதனை வெளிப்படுத்தும் பொருட்டு, பொது மக்களுக்கு கறிக்கு மீன்களை இலவசமாக வழங்குவதையும் காணக் கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.





