( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
லங்கா விவசாயிகள் போரத்தின் ஏற்பாட்டிலான அம்பாரை மாவட்ட விவசாயிகள் மாநாடு இன்று நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.
லங்கா விவசாயிகள் போரத்தின் அம்பாரை மாவட்டத் தலைவர் எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் இலங்கையில் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கின்ற முல்லா நிறுவனத்தின் முகாமையாளர் சுனில் சாந்த, இலங்கைக்கான இணைப்பாளர் சோமசிறி, அம்பாரை மாவட்டத்திலுள்ள நெற்செய்கையாளர்கள், தோட்டப்பயிர்ச் செய்கையாளர்கள் எனப் பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முல்லா நிறுவனத்தின் முகாமையாளர் சுனில் சாந்த கருத்துத் தெரிவிக்கையில்:-'கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் நம்மால் இவ்வாறு ஒரு கூட்டம் கூட்டுவதானாலும் சிஐடியினர், பொலிசார் எம்மைச் சூழ்ந்திருப்பர். எம்மால் சுதந்திரமாகக் கதைக்க முடியாது. கருத்துத் தெரிவிக்க முடியாது. உண்ணமுடியாது, குடிக்கமுடியாது. ஆனால் இன்று நடைபெறும் நல்லாட்சியில் அவ்வாறான நிலை இல்லை. எனவே, எமது பிரச்சினைகளை நாம் அரசிடம் முறையிட்டுத் தீர்த்துக் கொள்ள முடியும்' என நம்பிக்கை தெரிவித்தார்.
இதில் அம்பாரை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அதிலிருந்து மீட்சி பெறுவதற்கான சில திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. இறுதியில் மூன்று முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன
'01.சேதனப் பசளைகளின் பாவனை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு அரசாங்கம் நல்ல விலை கொடுத்து வாங்கி, அதனைக் களஞ்சியப்படுத்த வேண்டும்.
02.சேதனப்பசளை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு கிலோ கிராம் சேதனப் பசளையை அரசாங்கமானது ரூபா12.00 க்கு வாங்க வேண்டும்.
03.அம்பாரை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து அறுபத்தையாயிரம் ஏக்கரில் செய்கை பண்ணப்படுகின்ற நெல் உற்பத்தியைக் கொள்வனவு செய்து, களஞ்சியப்படுத்த அரசாங்கத்தினால் முடியாதவிடத்து, நெல்லை அரிசி மாவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடிய மாற்றுத் திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்'
