சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆள்மாறாட்டம் செய்து காதலியாக நடித்து பணம் வசூலித்த இளைஞன் ஒருவனை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை கினிகத்தேன நகரில் 5000 ரூபா பணத்தை பெற முற்பட்ட போதே குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6 மாதகாலமாக குறித்த இளைஞன் பெண்ணின் பெயரை கொண்டு முகநூலை ஆரம்பித்து மற்றொரு ஹட்டன் பகுதியைச் சேர்ந்த இளைஞனை காதல் வளையில் வீழ்த்தி பல்வேறு காரணங்களை கூறி சுமார் 45 ஆயிரம் ரூபா பணத்தை தனது வங்கி கணக்கில் வைப்பிலிடச் செய்துள்ளார்.
பணத்தை பெற்றுகொண்ட பின்னர் இளைனனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து பணம் வழங்கிய ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு சந்தேகம் ஏற்பட குறித்த நபர் தொடர்பில் பேஸ்புக்கில் தேடியுள்ளார்.
காதலியாக பழகியவர் கம்பளை புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் தெரிய வந்ததையடுத்து ஹட்டன் பிரதேச இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ஏமாற்றமடைந்த இளைஞன் வேறு ஒரு போலியான பெண்ணின் பெயரில் முகநூல் ஒன்றினை ஆரம்பித்து மேற்குறிப்பிட்ட இளைஞனுடன் காதலை ஆரம்பித்துள்ளார்.
பின்னர் மேற்குறிப்பிட்ட இளைஞன் மீண்டும் அவசர தேவையை கூறி 5000 ரூபா பணத்தை கேட்டடுள்ளார்.
இதனையடுத்து தனக்கு வங்கியில் பணத்தை வைப்பிலிட முடியாது எனவும் நேரடியாக வந்து கினிகத்தேனையிலுள்ள தனது நண்பணிடம் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ தினமான கடந்த சனிக்கிழமை (19) பொலிஸாருடன் கினிகத்தேனவிற்கு சென்ற இளைஞன் பணம் வாங்க வந்த இளைஞரை மடக்கிப் பிடித்துள்ளார்.
கினிகத்தேன பொலிஸ் நிலையத்தின் சிவில் பொலிஸ் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு விசாரனைக்குட்படுத்தப்பட்ட போது தனது தவறை ஒப்பு கொண்டுள்ளார்.
பின்னர் கடுமையான எச்சரிக்கையுடன் குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
