எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதியில் சிறுநீரக நோய்க்கு அதிகம் முகம்கொடுக்கும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மெதிரிகிரிய தலாகொலவெல ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் இன்று நடைபெற்ற சிறுநீரக நோயாளிகளுக்கான நாளொன்றுக்கு 24 ஆயிரம் லீற்றர் நீரை வழங்கும் இயந்திரமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல், தேவையான நலனோம்புகை நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அதேநேரம், தற்போது சிறுநீரக நோய் வடமேல் மாகாணத்தில் மட்டுமன்றி நாட்டில் மூன்றில் இரண்டு பகுதிக்கு வியாபித்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் சிறுநீரக நோய் கருத்திட்டம் தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும் விவசாய நடவடிக்கைகளில் கிருமிநாசினிகளை பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்து கொள்ளுதல் மற்றும் அது தொடர்பில் வழங்கப்பட வேண்டிய ஆலோசனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் கடுமையான பொருளாதார கஸ்டங்கள் உள்ள கிராமங்களை முன்னுரிமைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள 5 வருட திட்டத்திற்காக எதிர்வரும் வாரத்தில் புதிய அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலக நாடுகள் அரசாங்கத்துடன் நட்புறவாக செயற்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் இலங்கை முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
