கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட உடல் மாதிரிகள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போதே குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நீதிவானின் உத்தரவுக்கு அமைய கல்கிஸை மேலதிக நீதிவான் முன்னிலையில் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் உள்ளிட்ட குழுவினரால் தோண்டி எடுக்கப்பட்ட தாஜுதீனின் சடலத்தின் பிரேத பரிசோதனையை முன்னாள் சட்ட வைத்திய தலைமை அதிகாரி ஆனந்த சமரசேகர மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக வைத்திருந்த தாஜுதீனின் உடல் மாதிரிகள் திடீரென காணாமல் போயுள்ளதாக ஆனந்த சமரசேகர தெரிவித்ததாக குற்ற புலனாய்வு பிவிரினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாஜுதீனின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட உடல் மாதிரிகள் ஒன்று கூட கிடைக்கவில்லை என கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோனும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் உள்ளிட்ட குழுவினரின் கட்டுப்பாட்டில் இருந்த வஸீம் தாஜுதீனின் எலும்பு மாதிரிகள், மூலக்கூறுகள் தொடர்பான சோதனைகளுக்காக புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் பிரிவின் சார்ஜன்ட ரத்னபிரிய ஊடாக ஜீன்டெக் நிறுவனத்துக்கு ஒப்படைக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.
