இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காக சென்று மினா நகரில் ஏற்பட்ட சன நெரிசல் அனர்த்தத்தையடுத்து காணாமல் போன இரு யாத்திரிகர்களும் உயிரி
ழந்துள்ளமையை சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
பெருநாள் தினத்தன்று மினா நகரில் ஏற்பட்ட சன நெரிசல் அனர்த்தத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமாகிய நிலையில் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயங்களுக்குள்ளாகி மக்காவிலுள்ள வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த அனர்த்தம் நடந்த தினத்திலிருந்து கொழும்பைச் சேர்ந்த தம்பதியினர் காணாமல் போயிருந்தனர்.
இவர்கள் தொடர்ந்தும் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் கணவர் அப்துல் அஸீசின் (57) ஜனாசா மக்கா ஜனாசா சாலையில் அவரது சவூதியில் இருக்கும் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.
அவரது மனைவி றோசானா ஹாரா (55)வின் ஜனாசா நேற்றுக் காலை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவர்களினதும் ஜனாசாக்கள் மக்கா–மினா நகருக்கிடையிலுள்ள ஜனாசா சாலையிலேயே அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் அனர்த்தம் இடம்பெற்ற போது தமது அடையாள அட்டைகளை கழுத்துப்பட்டியில் அணிந்திருந்ததால் அவர்களது விபரங்களை சவூதி அதிகாரிகள் கணனிப்படுத்தியிருந்ததாகவும் முஸ்லிம் விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இருவர்களதும் ஜனாசாக்கள் மக்காவில் நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் அவ்வாறே நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
காணாமல் போன இருவர்களையும் பல நாட்களாக மக்கா வைத்தியசாலைகளில் தேடிவந்த ஹஜ்குழு உறுப்பினர்களுக்கும், டாக்டர்களுக்கும் சவூதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார்.
மினா சனநெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1100 என சவூதி அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை விபத்துக் காயங்களுக்குள்ளான நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்தும் மக்கா பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தில் இலங்கையர் எவரும் காயங்களுக்குள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் இலங்கையிலிருந்து 2800பேர் ஹஜ் கடமைக்காகச் சென்றிருந்தனர். இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர்.
கடமைகளை நிறைவு செய்து விட்டு நாடு திரும்பியுள்ளனர். தொடர்ந்தும் தொகுதி தொகுதியாக நாடு திரும்புகின்றனர்.
இறுதித் தொகுதியினர் எதிர்வரும் 21ம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.
சவூதி அரசாங்கம் விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு விசாரணைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
