பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற பிரேரணை ஒன்று கண்டி மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சபையின் மாத இறுதிக் கூட்டத் தொடர் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போதே இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் மிக வேகமாகப் பரவிவரும் பெண்கள் மீதான பாலியல் குற்றச் செயல் சிறுவர் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தல் போன்ற குற்றச் செயல்களை புரியும் சம்பவங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டு நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்படும் குற்றவாளிகளுக்கு கட்டாயமாக மரண தண்டனை விதித்து தூக்கிலிடப்பட வேண்டும் என்று பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சபையின் எதிர்கட்சித் தலைவர் சுமிந்த விக்ரமசிங்க (ஐ.தே.க ) உறுப்பினர் உபாலி ஜயசேகர (ஐ.ம.சு.கூ) ஆகியோர் இந்த யோசனையை சமர்பித்து மனித கொலைக்காரர்களுக்கு கட்டாயமாக மரண தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் எனவே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தூக்கு மரத்தை நிருவ வேண்டும் என்றும் சபையில் வலியுறுத்தினார்.
இதன் பின்னர் இவ் யோசனைக்கான தீர்மானம் சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதுடன் இத் தீர்மான பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
virakesary.lk
