பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கொலை என நம்பப்படும் மர்ம மரணம் குறித்து, அவருக்கு மிக நெருங்கிய யுவதி ஒருவரை விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
வஸீம் தாஜுதீனுக்கு மிக பழக்கப்பட்டவர் என அறியப்படும் குறித்த யுவதியை எதிர்வரும் சில நாட்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்க விசாரணை அதிகாரிகள் தீர்மானித்துள்ள நிலையில், இந்த விசாரணையானது மிக விரைவில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், தாஜுதீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதியாக நம்பும் புலனாய்வுப் பிரிவினர், பிரபல அரசியல்வாதியொருவரின் மகனால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு மைதானம் ஒன்று தொடர்பிலான கொடுக்கல் வாங்கல் தொடர்பில், வஸீம் தாஜுதீன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அதற்காக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த விடயங்கள் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
