7000 முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 650 அதிகாரிகள் மாத்திரமே இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நிலையில் ஒரு அதிகாரி 120 முறைப்பாடுகளைக் கையாளவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போதியளவு அதிகாரிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இன்மை, குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்பாடல் இடைவெளி என்பன விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துவதாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் உள்ள அரச புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட பிரிவுகள் குறித்தும், அவற்றில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 17 பிரிவுகளின் பிரதானிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் தொழில்நுட்ப வளங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். விசாரணைகளில் புதிய தொழில்நுட்பம் முக்கியமான பங்காற்றிவரும் நிலையில் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புதுப்பிக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பொலிஸ் திணைக்களத்தின் கீழ் உள்ள பிரிவுகளுக்கிடையில் தொடர்புகளைப் பேணவேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் திணைக்களம் ஆகியவற்றுடன் தொடர்புகளைப் பேணி அவற்றிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உதாரணமாக எக்னெலிகொட, வாசிம் தாஜூடீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் படுகொலைகள் தொடர்பில் தொலைபேசி அழைப்புக்களை பரிசீலிக்கவேண்டியுள்ளது. இருந்தபோதும் தொலைபேசி நிறுவனங்களுடன் சரியான புரிந்துணர்வு இன்மையால் காலதாததம் ஏற்படுவதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
