இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காடுகள் பெருன்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களினால் தொடர்ந்தும் சட்ட விரோதமாக அழிக்கப்படுவதாக மாகாண விவசாயம் மற்றும் கால் நடை அபிவிருத்தி அமைச்சர் கே. துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் மட்டும் பொலநறுவை மற்றும் அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த சிங்கள விவசாயிகளினால் சுமார் 6500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதை வனத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த சட்டவிரோத காடழிப்புக்கு ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் பின் புலம் இருப்பதாகவும் அவர் சந்தேகமும் வெளியிடுகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெளி மாவட்ட சிங்களவர்கள் நெல் வேளாண்மை செய்கையிலும் சிறு தானியச் செய்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
காடுகள் அழிக்கப்படுவது சட்ட விரோதம் என வனத்துறையினரால் அந்த பகுதியில் பகிரங்கமாக அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தாலும் அது திருப்தியளிப்பதாக இல்லை என்கின்றார் மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய 25 சத வீத வனப் பகுதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனத்துறை உரியது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
காடுகள் சட்ட விரோதமாக அழிக்கப்படுவது தொடர்பாக மாகாண விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என்றும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தமக்கு உறுதி வழங்கியதாகவும் துரைராஜசிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
