செனட்டர் அல்-ஹாஜ் எஸ். இசட் மசூர் மௌலானா அவர்களின் மறைவு நிரப்ப முடியாத இடைவெளி ஒன்றை சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மர்ஹும் செனட்டர் அல்-ஹாஜ் எஸ். இசட் மசூர் மௌலானா அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் சார்பாக அதன் தேசிய பொதுச் செயலாளர் சட்டத்தரணி அல்-ஹஜ் ரஷீத் எம். இம்தியாஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
காலஞ்சென்ற செனட்டர் அல்-ஹாஜ் எஸ். இசட் மசூர் மௌலானா சமூக சேவை இயக்கங்கள் பலவற்றில் ஆர்வத்தோடு ஈடுபட்டு மக்களுக்காக சேவையாற்றியவர். அரசியலில் பல உயர் பதவிகளைப் பெற்று அலங்கரித்தவர். 'செனட்டர் என்றாலே மசூர் மௌலானாதான்' எனும் அளவுக்கு புகழ் பெற்றவர் . பல அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்து சமூக நலனுக்காக இவர் ஆற்றிய சேவைகளை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் ஸ்தாபகர்களில் ஒருவராக திகழ்ந்த அவர் அதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு அண்மையில் நடைபெற்ற அதன் பொன்விழாவில் இவரது சேவையை மதித்து கௌரவித்தமை விசேடமாக குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இழப்பால் துயரருற்றிருக்கும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏனையோருக்கும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது.
இவ்வாறு அவ் அனுதாபச் செய்தியில் சட்டத்தரணி அல்-ஹஜ் ரஷீத் எம். இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.
