Featured Home (TOP)

Recent Comments

Thursday, August 6, 2015

avathani Media Network

தேர்தல் விதிமுறை மீறும் செயல்கள் தொடர்ந்தால் நீதியான ஒரு தேர்தலை எதிர்பார்க்க முடியாது: NFGG பத்திரிகையாளர் சந்திப்பில்பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

(NFGG ஊடகப்பிரிவு)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று இரவு அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது.

தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), தலைமைத்துவ சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
"தேர்தல் சட்ட மீறல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களை அறிந்து ஆதாரபூர்வமாக தேர்தல் தினைக்களை அதிகாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் அறிவித்தோம். தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகருக்கு உத்திரவிட்டிருக்கிறார்கள். ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அசமந்தமாக நடந்து கொள்வதை நாம் காண்கிறோம். குறிப்பாக காத்தான்குடி பொலிஸார் மிகவும் பாராபட்சமாக நடந்துகொள்வதனை நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் பொலிஸாரின் இந்த நிலைமை தொடர்ந்தால் நியாயமான நீதியான ஒரு தேர்தலை எதிர்பார்க்க முடியாது எனவும் அஞ்சுகிறோம்.'' என்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் குறிபிட்டார்.

ஒலிப்பதிவு இணைப்பு








Read More
avathani Media Network

கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டைன!

ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்வருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹிங்குரங்கொடை ஜயந்திபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றிற்கே மேற்படி மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு ஜூலை மாதம் 07ம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை கொலை செய்ததாக அதே பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதன்படி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பொலன்னருவை உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீரப்பளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு எதிர்வரும் 07ம் திகதி வாழைச் சேனையில்

(எம்.எச்.எம்.அன்வர்)

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு எதிர்வரும் 07ம்திகதி வெள்ளிக்கிழமை 3.00 மணிக்கு வாழைச்சேனை வீ சீ பொதுமைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் ஸெட் ஏ நஸீர் அகமட் நேற்று ஏறாவூரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும்  பல முக்கிய பிரமுகர்களின் உரை இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளதாகவும் கல்குடா முஸ்லிம்கள் பெரும் ஆதரவு தருவார்கள் எனவும் மாவட்டத்தின் அனைத்து ஆதரவாளர்களையும் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகிக்கும் உலமா காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்;ட பல கிளைகள் சேர்ந்து நடாத்தப்படவுள்ள இப்பிரமாண்டமான மாநாட்டுக்கு அனைவரையும் சமூகமளிக்குமாறும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது அவர் மேலும் தெரிவித்தார்

மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டிற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு செயலாளருமான யூ எல் எம் என் முபீன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியாரும் சமூகமளித்திருந்தனர்.



Read More
avathani Media Network

அபாண்டக் குற்றச்சாட்டுக்கான அபராதத் தொகையைச் செலுத்த முற்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி!

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

கடந்த மாதம் 23ம் திகதியன்று கல்லடிப் பாலத்தடியில் வைத்து காத்தான்குடிப் போக்குவரத்துப் பொலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நான், தவறான முறையில் பயணித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், எனது சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களால் வழங்கப்பட்ட பதில் சாரதி அத்தாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நீதிமன்றத் திகதிக்கமைவாக இன்று 05ம் திகதி காலை 09:00 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்குச் சமூகமளித்தேன்.

நண்பகல் 12:00 மணியளவில் மோட்டார் போக்குவரத்துப் பொலீசாரால் மன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சகல குற்றப்பத்திரிகைகளும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் எனது பெயர் அழைக்கப்படாதது குறித்து நான் நீதிமன்றத்தில் முன்தோன்றி நீதிபதி அல்ஹாபிழ். என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களிடம் இதுபற்றி முறையிட்டேன்.

அவர் என்னிடமிருந்த பதில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பார்வையிட்டார். அதில் இன்றைய தினமே நீதிமன்றத் திகதியாகவும், எனது பதில் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் நாளாகவும் இருப்பதை அவதானித்து, நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த பொலீசாரிடம் காத்தான்குடிப் பொலீசார் எங்கே? எனக் கேட்டார்.

அதற்கவர்கள், எவரும் இல்லை என பதிலளித்தனர். உடனே காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து அவரை நீதிமன்றத்திற்கு வரவழைக்குமாறு பணித்தார்.

சற்று நேரத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. வெதகெதர நீதிமன்றத்திற்குச் சமூகமளித்தார். அவர் வந்த நேரத்தில் மன்றில் வேறோர் வழக்கின் விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. சற்று நேரம் அவர் மன்றில் பிரசன்னமாகி இருந்து விட்டு பின்னர் வெளியில் சென்றதையடுத்து ஒரு மோட்டார் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி என்னை மன்றிலிருந்து வெளியே வருமாறு சைகை மூலம் அழைத்தார்.

நான் வெளியில் வந்ததும் எனது பிரச்சினை பற்றி அவர் வினவினார். அவருக்கு பதிலளித்த நான், வீதியால் வந்த என்னை ட்ரஃபிக் பொலிசார் தடுத்து நிறுத்தி எனது ட்ரைவிங் லைசன்ஸை வாங்கிக் கொண்டு, 500 ரூபா அபராதம் செலுத்தி விட்டு வருமாறு கூறினர். நான் தவறாகப் பயணிக்கவில்லை என்பதால் அபராதப் பணம் செலுத்தாமல் இந்த பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளவாறு இன்று நீதிமன்றத்திற்கு வந்தேன். மன்றில் எனது பெயர் அழைக்கப்படவில்லை. ஒன்றில் இன்று மன்றில் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள். அல்லது இன்றுடன் காலாவதியாகும் பதில் அனுமதித் திகதியை நீடித்துத் தாருங்கள். இதுதான் எனது பிரச்சினை என்றேன்.

அதற்கிணங்கிய அவர் எதிர்வரும் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை தீகதியை நீடிப்புச் செய்து பக்கத்தில் நின்ற காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கையொப்பமும் பெற்றுத் தந்ததுடன், மாலை 05:30 மணிக்கு காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பதிகாரியின் பதவி முத்திரையை அதில் பொறித்துப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.

அதன்படி மாலை 05:30 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்றேன். ஒரு பொலிஸ்காரர் என்ன விடயம் எனக் கேட்டார். விடயத்தைக் கூறினேன். என்னிடமிருந்த பதில் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு மோட்டார் போக்குவரத்துப் பிரிவுக்குச் சென்றார். சில நிமிடத்தில் அப்பிரிவுக்கான பொறுப்பதிகாரியின் பதவி முத்திரையைப் பதித்துக் கொண்டு வந்த அவர், நிலையப் பொறுப்பதிகாரியிடம் அதனைக் காண்பித்துவிட்டு வருவதாகக்கூறி, அவரது அலுவலகத்திற்குச் சென்றார். நான் வெளியில் நின்றிருந்தேன்.

சில நிமிடத்தில் வெளியில் வந்த அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர், என்னிடம் தரப்பட்ட 500 ரூபாய் அபராதம் செலுத்தும் பத்திரத்தைத் தரும்படி கேட்டார். அதனைக் கொடுத்தேன். பெற்றுக் கொண்டு நிலையப் பொறுப்பதிகாரியின் அறைக்கு மீண்டும் சென்றார். நான் காத்திருந்தேன்.

பின்னர் என்னை அவ்வறைக்கு வருமாறு அழைத்தார். நான் உள்ளே சென்றேன். அங்கு நின்றிருந்த மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொலீசார் ஒருவரிடம் என்னிடமிருந்து பெறப்பட்ட அபராதம் செலுத்தும் பத்திரத்தையும், 500 ரூபா பணத்தையும் கையளித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, எனது அசல் சாரதி அனுமதிப்பத்திரத்தை என்னிடம் நீட்டினார்.

அதனை வாங்க மறுத்த நான், என்னிடமும் பணம் இருக்கிறது. ஆனால் அநியாயமாக ஒரு ரூபாவும் அபராதம் செலுத்த மாட்டேன். என்மீது நீங்கள் வழக்கைப் பதிவு செய்யுங்கள். அதுவரை எனது பதில் அனுமதிப்பத்திரத்தை காலநீடிப்புச் செய்து தாருங்கள் என்று கூறினேன்.

அவர் சுமார் பத்து நிமிடம் வரை என்னைச் சமாதானப்படுத்தும் வகையில் எதோவெல்லாம் கூறனார். அவரது சமாதானத்தை முற்றாக ஏற்க மறுத்த நான் எனது கோரிக்கையில் உறுதியாக இருந்தேன். எனது பதில் அனுமதிப் பத்திரத்தை கால நீடிப்புச் செய்து தராவிட்டால் இன்றுடன் நான் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதையே நிறுத்திக் கொள்கிறேன் எனக்கூறிக் கொண்டு எழுந்தேன். 

ஈற்றில் அவர் கால நீடிப்புச் செய்யப்பட்ட பதில் அனுமதிப்பத்திரத்தை என்னிடம் தந்தார். பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வரும் 11ம் திகதி என்மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுக்குரிய குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அன்றைய தினமும் நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்கவுள்ளேன்.

பொலீசாருக்கு பொதுமக்கள் பணம் கொடுத்து பிரச்சினைகளில் இருந்து விடுபட முயற்சிக்கும் இக்காலத்தில், பொலீசாரே பணம் கொடுத்து பொதுமக்களின் பிரச்சினைகளில் இருந்து விடுபட எத்தனித்த சம்பவம் இன்றுதான் எனது வாழ்வில் முதல்தடவையாகப் பதிவாகியுள்ளது. 

இதிலிருந்து சட்டத்தையும், ஒழுங்கையும் நாட்டில் நிலைநிறுத்த வேண்டிய பொலீசார் எப்படியெல்லாம் அதிலிருந்து நழுவிச் செயற்பட்டு பொதுமக்களை வீண் சிரமங்களுக்கு உள்ளாக்குகின்றனர் என்பது புலனாகின்றதல்லவா?


Read More
avathani Media Network

காத்தான்குடியில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட ஊர்வலமும் விழிப்புணர்வு கூட்டமும்

(எம் எச்.எம் அன்வர்)

'தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் 2015' எனும் தலைப்பில் நேற்று காத்தான்குடி பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப்பிரிவினால் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் ஊர்வலமும் விழிப்புணர்வுக் கூட்டமும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது

காத்தான்குடி பிரதச செயலகத்திலிருந்து பிரதான வீதியூடாக சென்ற இவ்வூர்வலம் குட்வின் சந்திவரை சென்று திரும்பியதுடன் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றம் இடம்பெற்றது

மேற்படி ஊர்வலத்தில் காத்ததான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் ,உதவி பிரதேச செயலாளர் ஏ சி அப்கர், ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் எம் எஸ் எம்.ஜாபீர் பொதுச்சுகாதார வைத்திய அதிகார்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள்  பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்












Read More