
வடக்கு முஸ்லி்ம் விவகாரம் - உண்மையான தோற்றப்பாடும் தேவைப்பாடும்
(அ.ஸ்மின்-)
வடக்கு முஸ்லிம்கள்; இன்றைய திகதியில் அதிகம் பேசப்படுகின்ற விடயம். அது குருடர்கள் தரிசித்த யானையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு சில விடயங்களை மிகவுமே வெளிப்படையாக எடுத்துரைக்க முனைகின்றேன்.
வடக்கு முஸ்லிம்களின் விவகாரத்தை முழுமையாக அறிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியாக மாத்திரமே இதனை நோக்கவேண்டும், மாற்றமாக தனிப்பட்ட ரீதியான விமர்சனமாக இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என இப்பத்தியின் ஆரம்பத்திலேயே தெரிவித்துக்கொள்கின்றேன்.
1990 ஒக்டோபர் 30ம் நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை 2 மணித்தியாலயக்கெடுவோடு ஆயுத முனையில் வெளியேற்றியதோடு வடக்கு மாகாணத்தில் “முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை” மிகவும் வெற்றிகரமாக தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பு நிறைவேற்றியது. 1990 ஒக்டோபர் 12ம் திகதி சாவகச்சேரியில் வாழ்ந்த முஸ்லிம்களை 1வார காலத்திற்குள் வெளியேறுமாறு அறிவித்தமையோடு இவர்களின் வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு செயற்பாடுகள் தொடக்கம் பெற்றன.
கிளிநொச்சி, நாச்சுக்குடா, முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவின் எல்லைக்கிராமங்கள் என நீண்டு இறுதியாக யாழ்ப்பாணத்தில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை நிறைவுக்கு வருகின்றது. எனவே இது ஒரு திட்டமிடப்பட்ட இனச்சுத்திகரிப்பு (Planned and sponsored Ethnic Cleansing) என்பது எவ்வித வாதப் பிரதிவாதங்களுமின்றி முழு உலகாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.
இவ்வாறு இனச்சுத்திகரிப்புக்குள்ளான வடக்கு முஸ்லிம் சமூகம் இலங்கையின் பல்வேறு திக்குத்திசைகளிலும் தஞ்சம் பெற்றார்கள். இத்தகைய வெளியேற்றமே அவர்களது ஒட்டுமொத்த வாழ்வியலை புரட்டிப்போட்டது. குடும்பம் என்கின்ற மிகச்சிறிய நிறுவனம் தொடங்கி, சமூகம் என்கின்ற மிகப்பெரிய நிறுவனம் வரை அனைத்தும் ஆட்டம் கண்டன.
எனவே வெளியேற்றத்தை தொடர்ந்து உடனடியாக சுதாகரித்துக்கொண்டு தன்னுடைய அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளத் திராணியற்ற சமூகமாக வடக்கு முஸ்லிம்கள் மாறினார்கள். 1990-/1994 வரை எவ்வித அசைவாட்டமும் இல்லாத சமூகமாகவே வடக்கு முஸ்லிம்கள் காணப்பட்டார்கள்.
1994களில் வடக்கு முஸ்லிம்களிடத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் நிகழ்ந்தேறின. ஒன்று வடக்கு முஸ்லிம்களை மையப்படுத்திய வடக்கு முஸ்லிம்களின் முயற்சியினால் சமூக அமைப்புகள் தோற்றம் பெற்றன.
இரண்டாவது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு மக்கள் பிரதிநிதிகளை வடக்கு மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தும், வன்னி மாவட்டத்திலிருந்தும் பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் (IDP) என்ற நிலையில் இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு நிறுவனங்களும் எமது மக்களை கையாண்டனர். ஆனால் இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கான தீர்வு விடயத்தில் எவ்விதமான உறுதியான நிலைப்பாடுகளையும் மேற்கொள்வதற்கு எவருமே முன்வரவில்லை. “தமது சொந்த தாயக மண்ணில் மீள்குடியேற்றமே வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான அடிப்படைத் தீர்வு” என்று எவருமே துணிந்து சொல்வதற்கு அப்போதைய சூழலில் முன்வரவில்லை. அவர்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் அவர்களது வாழ்வியல் தேவைகளை நிவர்த்திக்க பலரும் முனைந்தார்களே தவிர அவர்களுக்கான நிரந்தரத் தீர்வை அடையாளம் செய்வதற்கோ அல்லது அத்தகைய தீர்வை மக்கள் மயப்படுத்தி அவர்களை வழிநடாத்தவோ எவருமே முன்வரவில்லை.
2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூட வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்து எவ்வித குறிப்புகளையும் காணமுடியாது.
அதே ஆண்டில் இடம்பெற்ற ஹக்கீம் பிரபா உடன்படிக்கையில் கூட “வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீளக்குடியேற முடியும்” என்ற வெற்று வாசகம் மட்டுமே காணப்பட்டது.
இவ்வாறாக வடக்கு முஸ்லிம்களின் விவகாரம் எல்லாத் தரப்புகளினாலும் கைவிடப்பட்டவிடயமாகவே அன்றைய திகதியில் காணப்பட்டது.
வடக்கு முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்ய முடிந்தவர்கள் தமது அரசியலை மிகக் கச்சிதமாக செய்துகொண்டார்கள், வடக்கு முஸ்லிம்களின் அகதி நிலைகளை வைத்து வெளிநாட்டு உதவிகளைத் தருவித்துக்கொள்ள முடியுமானவர்கள் அதனை செய்து முடித்தார்கள்.
இப்படியாக வடக்கு முஸ்லிம்களின் விவகாரம் அவரவரது தேவைகளுக்கு ஏற்ப கையாளப்பட்டதே தவிர ஒரு பொது உடன்பாட்டில், பொது நோக்கை அடையாளம் செய்து அதற்கேற்றாற்போல முன்னகர்த்தப்படவில்லை.
இவ்வாறான நிலை 1990 முதல் 2009 யுத்த நிறைவு வரைக்கும் நீண்டு வந்திருக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் வருகின்றபோது வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ஒரு பேசுபொருளாக மாறும்; விடுதலைப்புலிகளை வசைபாடுவதற்கான, தமிழ் அரசியல் வாதிகளின் மீது விமர்சனக் கணைகளைத் தொடுப்பதற்கான, இனவாதத்தை உரத்த தொனியில் பேசுவதற்கான, அரசாங்கத்தைச் சாடுவதற்கான, வடக்கு முஸ்லிம்களை வைத்துப் படம் காட்டுவதற்கான, ஒரு நல்ல சந்தர்ப்பமாக இது அமைந்திருக்கின்றதே தவிர வடக்கு முஸ்லிம்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்திருக்கவில்லை. என்ற ஆதங்கத்தை வடக்கு முஸ்லிம்கள் பலரிடத்திலும் எம்மால் காணமுடியும்.
1990களில் பலவந்தமான வெளியேற்றமும் மக்கள் வெளியேறிச் செல்வதற்குத் தயாரில்லாத நிலையில் ஏற்பட்டதைப்போல, 2009களில் மீளக்குடியேற்றத்திற்கான சந்தர்ப்பமும் எமது மக்கள் மீள்குடியேற்றத்திற்குத் தயாரில்லாத சூழலில்தான் ஏற்பட்டிருக்கின்றது.
1990 முதல் 2009 வரை வடக்கு முஸ்லிம்கள் எவ்வாறு கையாளப்பட்டார்கள் என்பதை மேலே நோக்கினோம். அதே பலவீனங்களைச் சுமந்தவர்களாகவே 2009களின் பின்னரும் வடக்கு முஸ்லிம்கள் பயணப்பட்டார்கள்.
2009களின் பின்னர் ஏற்பட்ட யுத்தமற்ற சூழ்நிலையில் மீளக்குடியேறுவதற்கான சூழல் ஏற்பட்டது. மஹிந்த அரசாங்கம் வடக்கிலே ஒரு சுமூகமான சூழ்நிலை காணப்படுகின்றது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.
அதன்பிரகாரம் 2009 ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலைக் குறிப்பிட முடியும், குறித்த தேர்தலில் மஹிந்த அரசு தனக்குச் சாதகமான ஒரு பதிலை எதிர்பார்த்து தேர்தலில் களமிறங்கியது.
இத்தேர்தலில் வடக்கின் தமிழ் சமூகம் முழுமையான பங்குபற்றலை மேற்கொள்ள எவ்விதமான வாய்ப்பும் இல்லாத நிலையில் முஸ்லிம்கள் இத்தேர்தலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள். யாழ்ப்பாணம் மாநகர சபையில் 5 முஸ்லிம் உறுப்புரிமையினைப் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு முஸ்லிம்களுக்கான அரசியல் வாய்ப்பு அதிகரித்திருந்தது.
முசலி பிரதேச சபை முற்றாக முஸ்லிம்களின் சபையாக மாறியது, மீளக்குடியேற்றம் நடைபெறுவதற்கு முன்னமே உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.
இத்தகைய அரசியல் வாய்ப்புகளை வைத்துக்கொண்டு மீள்குடியேற்றத்தை நோக்கி வடக்கு முஸ்லிம்கள் பயணித்தார்கள்.
2009/-2015 இற்றைவரையான காலத்தில் வடக்கில் இடம்பெற்ற முஸ்லிம் மீள்குடியேற்றங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடலுடன் கூடியன அல்ல, மாறாக தன்னார்வமாக இடம்பெற்றவையே, எனவே மீள்குடியேற்றம் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது என்பதைவிடவும் சாத்தியமற்றுப்போய்க்கொண்டிருக்கின்றது என்பதுதான் யதார்த்தமாகும்.
எமது மக்களின் மீள்குடியேற்ற நடைமுறைகளை எடுத்து நோக்கினால், வடக்கின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமமும் தன்னுடைய மீள்குடியேற்றம் குறித்து ஒரேவகையான மனோநிலையினைக் கொண்டிருக்கவில்லை.
மாறாக இப்போது தாம் தங்கியிருக்கின்ற பிரதேசங்களில் குடியிருந்தவண்ணம், மீள்குடியேற்றத்தை சிந்தித்தார்கள், எத்தனை குடும்பங்கள் மீளக்குடியேறப்போகின்றோம், அவர்களுக்குத் தேவையான காணிகள் எவ்வளவு, வீட்டுத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் என்ன, வாழ்வாதாரத்தை எவ்வாறு ஒழுங்கமைக்கப் போகின்றோம், கல்வி, சுகாதார நிலைகளை எவ்வாறு ஒழுங்கமைப்பது, உட்கட்டமைப்பு விடயங்களை எவ்வாறு சீரமைப்பது, சமூக அமைப்புகளை நிறுவனங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது போன்ற விடயங்கள் மீள்குடியேற்றத்திற்கு முன்னமே ஒரு அமர்வில் மீள்குடியேறுகின்ற மக்களின் பங்களிப்போடு இடம்பெறவில்லை, அல்லது மிகச் சொற்பமாக இடம்பெற்றிருக்கின்றன.
இதுவே மீள்குடியேற்றத்திற்கு போதிய தயார் நிலையற்றவர்களாக எமது மக்களை மாற்றியமைத்திருக்கின்றது.
மீள்குடியேற்றம் குறித்த அரச நடைமுறைகள் குறித்தும் எமது மக்கள் மத்தியில் போதிய விளக்கங்கள் கிடையாது, அத்தோடு எமது மக்களின் மீள்குடியேற்றத் தேவைகளுக்கு ஏற்ப அரச மீள்குடியேற்ற நடைமுறைகள் மறுசீரமைக்கப்படவில்லை. சாதாரண அரச நடைமுறைகளின் படி மீள்குடியேற்ற செயற்திட்டமானது பின்வரும் ஒழுங்கில் இடம்பெறுகின்றது.
மீள்குடியேறுகின்ற நபர், அல்லது குடும்பம் தனது மீள்குடியேற்றத்தை, தான் மீளக்குடியேறிய பிரதேசத்தின் கிராம சேவையாளருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும், அதனை பிரதேச செயலாளரிடம் பதிவு செய்து அவர்களுக்கான குடும்ப பதிவினை கிராம உத்தியோகத்தர் உறுதி செய்தல் வேண்டும், மீளக்குடியேறியவருக்கு மீளக்குடியேறிய பிரதேசத்தில் காணி இருப்பின் அதில் தற்காலிக வீடமைப்பு, அல்லது நிரந்தர வீடமைப்புக்கான உதவிகளை வழங்க வேண்டும், அத்தோடு மீளக்குடியேறியவர்களுக்கான உலர் உணவு உதவித் திட்டம், தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதற்கான உதவித்திட்டம், வாழ்வாதார உதவித்திட்டம் போன்ற உதவிகளை அரசு மீளக்குடியேறியவர்களுக்கு வழங்கவேண்டும்.
காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு தம்முடைய பிரதேச செயலக எல்லைக்குள் இருக்கும் அரச காணிகளைப் பகிர்ந்தளிப்பதும் பிரதேச செயலரின் பொறுப்பாகவே காணப்பட்டது.
ஆனால் இந்த நடைமுறைகள் வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன; ஒன்று வடக்கு முஸ்லிம்கள் தம்மை இத்தகைய அரச நடைமுறைகளுக்குள் சீராக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்றும், அதிகாரிகள் முஸ்லிம்களின் விடயத்தில் பக்கச்சார்பாகவும், இனத்துவரீதியான பாகுபாடுகளுடனும் நடந்துகொண்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவை இரண்டு காரணிகளையும் முற்று முழுதாக புறக்கணித்துவிட முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கு முஸ்லிம்களிடம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள ஒரு அமைச்சர் இருந்தார், ஆளும்தரப்பின் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இருந்தன, உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதித்துவங்கள் இருந்தன. ஆனாலும் இத்தகைய பிரதிநிதித்துவங்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை திட்டமிடுவதிலும், சீரமைப்பதிலும் ஒழுங்கமைப்பதிலும் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான்.
2013 செப்டம்பர்; முதன் முறையாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. வடக்கு முஸ்லிம்கள் தங்களுடைய வாக்குப்பலத்தினால் மூன்று மாகாணசபை உறுப்பினர்களைத் தெரிவு செய்தார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கென்று ஒரு தேசியப்பட்டியல் ஆசனமொன்றினை முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழங்கியது, எல்லாமாக 4 முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்களை அமைந்திருக்கின்ற வடக்கு மாகாணசபையில் காணக்கூடியதாக இருக்கின்றது. இருந்தபோதிலும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னமும் சீரமைக்கப்படாமலேயே இருக்கின்றது.
2009-/2015வரையான காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் எதிர்கொண்ட சவால்களையும் எடுத்து நோக்குவது மீள்குடியேற்றத்தின் உண்மையான தன்மையை அறிந்துகொள்வதற்கு துணை நிற்கும்.
• மன்னார் உப்புக்குளம் பிரதேசத்தின் காணி சுவீகரிப்பு தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்டு இறுதியாக அதோடு தொடர்புபட்டவர்கள் பகிரங்க மன்னிப்புக்கோரவேண்டிய நிலை ஏற்பட்டது, ஆனால் மன்னார் உப்புக்குளம் காணி விவகாரத்திற்குத் தீர்வு கிடைக்கவில்லை.
• மன்னார் உவரி, ஓலைத்தொடுவாய் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான 3000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை காத்தான்குடியில் இயங்கும் அரபுக் கலாசாலையொன்றின் பெயரில் அத்துமீறி அபகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றில் சுமத்தப்பட்டு இன்றுவரை நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.
• மன்னார், நானாட்டான் பூவரசந்தீவு, பொன்தீவுக் கண்டல் காணியில் முஸ்லிம்களும், கிறிஸ்த்தவ சமூகத்தவர்களும் உரிமை கோரி முரண்பாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணத்தின் ஆளும் தரப்பினரின் தலையீட்டால் இரு சமூகங்களுக்கு மத்தியிலும் சுமுகமாக காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டது.
• வவுனியா இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற போராட்டத்தை தமிழ் அரசியல் வாதிகள் முன்வைத்த சந்தர்ப்பத்திலும், முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டப் பகிர்வுகள் நடந்தேறின.
• முல்லைத்தீவில் முஸ்லிம்களுக்கான காணி பகிர்ந்தளிப்பில் பிரச்சினைகள் ஏற்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள் இவ்விடயத்தை பெரிதுபடுத்த முற்பட்டாலும் பொதுவான அரச நடைமுறைகள் பின்பற்றப்பட்டு காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்ற உத்தரவாத்தை தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள்
• வில்பத்தினை அண்டிய மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்கள் அத்துமீறி காணிகளை அபகரிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தபோதிலும் அப்பிரதேசங்களில் அவ்வாறான அத்துமீறிய காணி அபகரிப்புகள் இடம்பெறவில்லை என்று விலங்குகள் சரணாலயத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
• யாழ்ப்பாணத்தில் 317 முஸ்லிம் குடும்பங்கள் இந்திய வீட்டுத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தும் 44 முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமே பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள், இதனை யாழ்ப்பாணம் பிரதேச செயலரின் இனரீதியான பாரபட்சத்தின் வெளிப்பாடாகவே யாழ்ப்பாண முஸ்லிம்கள் கருதுகின்றார்கள்.
• இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ள பிரதேசங்களாக மறிச்சுக்கட்டியின் ஒரு பகுதி, சிலாவத்துறை, மன்னார் பெரியமடு பிரதேசத்தின் மேச்சல் தரவைகள், விவசாய நிலங்கள் என்பவற்றை குறிப்பிட முடியும்.
இவை தவிர ஆங்காங்கே ஒரு சில சிறிய அளவிலான சவால்களையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தகைய சவால்கள், தடைகள் ஏன் ஏற்படுகின்றன என எம்மிடம் நீண்டகாலமாக ஒரு கேள்வி எழுகின்றது. இத்தகைய விவகாரங்களை கையாள முற்படுகின்றபோது கிடைக்கின்ற தகவல்கள் நான் முன்னர் குறிப்பிட்டது போல உரிய அரச நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, பயனாளிகள் குறித்து விபரங்கள் தரப்படுவதில்லை, மீள்குடியேற்றத்தோடு தொடர்பில்லா வெளிமாவட்ட மக்களே இத்தகைய விடயங்களைக் கையாள்கின்றனர், போன்ற காரணிகள் சொல்லப்படும், எம்மவர்களைக் கேட்டால் “இனத்துவேஷமாக நடக்கின்றார்கள்”, “பாகுபாடு” காட்டுகின்றார்கள் என்றும் பதில்வரும். இதன் மூலம் மீண்டும் நாம் காண்பது எம்முடைய அரசியல் பிரதிநிதித்துவங்கள் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தவறியிருக்கின்றார்கள் என்பதேயாகும்.
இப்போது நாம் எத்தகைய தீர்வை நோக்கி நகரவேண்டும் என்ற கேள்வி எம் முன்னால் எழுகின்றது. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் “மக்களின் தேவை” யாக மாறாதவரை, அல்லது “மக்கள் மயப்படுத்தாத” வரை வெற்றியடையாது.
மீள்குடியேறுகின்ற மக்கள் தாமாகவே மீள்குடியேற்றத்திற்கு முன்வரவேண்டும். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒட்டுமொத்த மக்களும் மீளவும் வடக்கில் குடியேற மாட்டார்கள், ஆனால் கணிசமான தொகையினர் மீள்குடியேற்றத்திற்கு முன்வருவார்கள். ஆனால் முதற்கட்டமாக மீள்குடியேற்றத்தின் அவசியம், தேவை, முக்கியத்துவம், வாய்ப்புகள், சவால்கள், நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது பிரதான கடமையாகும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைக் கையாள்வதற்கு ஒரு கூட்டுப்பொறிமுறை அவசியம், சமூகத்தலைமைகள், அரசியல் கட்சிகள், சமூக நிறுவனங்கள் இணைந்தே அத்தகைய ஒரு கூட்டுப்பொறிமுறையினை உருவாக்க முடியும், இது மிக அடிப்படையான விடயமாகும். அதனைத் தொடர்ந்து பின்வரும் விடயங்கள் முதன்மை அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
வடக்கு முஸ்லிம்கள் அனைவரும் 1990களில் தாம் வாழ்ந்த பிரதேசங்களின் பள்ளிவாயல்களில் தம்மைப் பதிவு செய்து, தமது வடக்கிற்கான அடையாளத்தை உறுதிசெய்தல் அவசியமாகும், பதிவானது வடக்கு முஸ்லிம்கள் குறித்த ஒரு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்காகவேயன்றி வேறு தேவைகளுக்கானதல்ல, இதனை முஸ்லிம் கலாசார அமைச்சு தன்னுடைய பொறுப்பாக நிறைவேற்ற முடியும்.
ஒரு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பள்ளிவாயல்கள், அப்பிரதேசத்தின் அரசியல், சமூகத்தலைமைகளோடு இணைந்து குறித்த பிரதேசத்திற்கான மீள்குடியேற்ற திட்டமிடல் செயலமர்வினை நடாத்துதல் வேண்டும், அச்செயலமர்வில் குறித்த பிரதேசத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு இருக்கின்ற காணி, வீட்டுத் தேவைகள், பிரதேசத்தில் அவர்களுக்கு இருக்கும் ஏனைய தேவைகளை அடையாளம் கண்டு பிரதேசத்திற்கான மீள்குடியேற்ற திட்டமிடல், மற்றும் நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்த முடியும். இத்தகைய பணியினை அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, சூறா கவுன்ஸில் போன்ற அமைப்புகள் முன்னின்று மேற்கொள்ள முடியும்.
மன்னாரில் 5 பிரதேச செயலகப் பிரிவுகளும், முல்லைத்தீவில் ஒரு பிரதேச செயலகப் பிரிவும், வவுனியாவில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளும், யாழ்ப்பாணத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளும், கிளிநொச்சியில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படவேண்டும்.
அத்தகைய திட்டமிடல்களின் அடிப்படையில் எம்மிடையே காணப்படுகின்ற அரசியல் பிரதிநிதித்துவங்களைப் பயன்படுத்தி “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நிகழ்ச்சித்திட்டம்” என்னும் ஒரு செயற்திட்டத்தை அரச அங்கீகாரம் உள்ள ஒரு செயற்திட்டமாக உருவாக்கிக் கொள்ள முடியும். அத்திட்டத்திற்காக அரச நிதி, மற்றும் தனியார் நிதியினை உள்ளீர்த்துக்கொள்வத்ற்கான வாய்ப்பு ஏற்படும்.
தொழில்வாய்ப்பு, வீடமைப்பு, காணி, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, சமூக நிறுவனங்கள், என்ற முன்னுரிமை ரீதியில் வடக்கு முஸ்லிம்களுக்கான விவகாரங்களை ஒழுங்குபடுத்தி செயற்படுவோமாக இருந்தால் ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கணிசமான அடைவுகளை எம்மால் ஈட்டிக்கொள்ள முடியும்.
இத்தகைய ஒரு காத்திரமான செயற்திறன் மிக்க செயற்பாடொன்றினை நோக்கியே வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் முன்னனகர்த்தப்படவேண்டும், மாறாக வெற்றுக்கோஷங்களுக்குப் பின்னால் அணிதிரள்வதும், நினைவு நாட்களை அனுஷ்டித்து முடிப்பதும் பயனற்றவை என்பதை மனதில்கொள்வோம்.
vidivelli.lk
vidivelli.lk



