பிரபல பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினரான தெமட்டகொட சமிந்தவின் சகோதரி, ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்தப் பெண்ணுடன் மேலும் நான்கு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதி பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பெரேரா உள்ளிட்ட குழுவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், ஒற்றர் ஒருவரை ஈடுபடுத்தி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 6 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பொருட்டு சந்தேகநபர்கள் தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
