சுதந்திரம்; அது அனைத்து உயிரினங்களும் அனுபவிக்கின்ற ஒரு சுகம். அதனை அவசியமின்றி எந்த உயிரினத்திடமிருந்தும் பறிப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை, அவசியமின்றி ஒரு மரத்தின் இலையைப் பறிப்பது கூட ஒரு வகை அநீதியே! எனினும் மனிதனுக்காகவே உலகின் ஏனைய படைப்புக்கள் அனைத்தையும் அல்லாஹ் படைத்தான் என்ற வகையில்… மனிதனுக்கு அனைத்தையும் அவன் வசப்படுத்திக் கொடுத்தான் என்ற வகையில்… அவசியமான போது அவற்றை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும் அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.
எனினும் ஒரு மனிதன் அடுத்த மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு அனுமதியே இல்லை. அது அவனது மத சுதந்திரமாக இருக்கலாம்; கருத்துச் சுதந்திரமாக இருக்கலாம்; நிம்மதியாக வாழும் சுதந்திரமாக இருக்கலாம்.
ஒரே ஒரு சுதந்திரத்தைத் தவிர! அந்த சுதந்திரத்துக்கு உலக மரபில் எங்குமே இடமில்லை. அது தான் சட்டத்தை மீறும் சுதந்திரம். இந்த சுதந்திரம் ஆட்சியாளர்களுக்கும் கூட தடைசெய்யப்பட வேண்டும். அப்போது தான் அவர்கள் செய்வது நல்லாட்சியாக இருக்கும்.
தற்போதைய அரசு சுதந்திரத்தை இவ்வாறானதொரு நோக்கிலேயே அணுகுகின்றது எனலாம். இந்த அணுகுமுறை தொடர்ந்தால் நிச்சயம் இலங்கையில் ஒரு நல்லாட்சி மலரும். அப்போது இலங்கை ஆசியாவின் அதிசயமாகவும் மாறும்.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
