கொழும்பு - இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்ற தாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது. இனப் படுகொலை என்ற வார்த்தையை அரசாங்கம் முழுமையாக ஏற்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றாக அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும் போது இவ்வாறு இனப்படுகொலை இடம்பெற்றதாக பிரேரணையை நிறைவேற்றுவதானது முழுமையாக இனவாதத்தை போஷிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றதாக வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் ராஜிதவிடம் 'கேசரி' தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றதாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது. இனப்படுகொலை என்ற வார்த்தையை அரசாங்கம் முழுமையா நிராகரிக்கின்றது. யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெறவில்லை.
யுத்தத்தின்போது மனித இழப்புக்கள் இடம்பெற்றன. அதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கு காரணம் சாதாரண மக்களை புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தியமையே ஆகும். யுத்த காலததில் சாதாரண மக்களை பாதுகாப்பு வலயத்துக்கு செல்லுமாறு அரசாங்கத்தினால் கோரப்பட்டது. அவ்வாறு பொது மக்கள் செல்வது புலிகளினால் தடுக்கப்பட்டமையினாலேயே இந்த இழப்புகள் பதிவாகின.
எனவே அவ்வாறு இனப்படுகொலை இடம்பெற்றிருந்தால் கூட அதற்கு புலிகள் அமைப்பே முழுமையான பொறுப்பை ஏற்கவேண்டும். மேலும் ஒரு வருடத்துக்கு முன்னர் இதே பிரேரணை வட மாகாண சபைக்கு வந்தபோது அதில் இனப்படுகொலை என்ற வசனத்தை சேர்க்க முடியாது என்று வடக்கு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது அந்த வசனத்தை பாவித்து பிரேரணையை நிறைவேற்றியுள்ளனர். ஒரு வருடத்துக்கு முன்னர் இனப்படுகொலை என்று கூற முடியாவிடின் தற்போது எவ்வாறு இனப்படுகொலை என்று கூற முடியும்?
கடந்த 6 வருடங்களாக இனப்படுகொலை என்று இவர்கள் எங்கும் கூறவில்லை. தற்போது மட்டும் திடீரென எவ்வாறு இதனை கூற முடியும்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றாக அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும்போது இவ்வாறு இனப்படுகொலை நடைபெற்றதாக பிரேரணையை நிறைவேற்றுவதானது முழுமையாக இனவாதத்தை போஷிப்பதாக அமைந்துள்ளது என்றார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றது என்று வட மாகாண சபையினால் கூற முடியாது. இந்த விடயம் குறித்து தற்போது பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளை பாதிக்கும் என்று அமைச்சர் ராஜித்த த இந்து பத்திரிகைக்கும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றதாக வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் இந்து பத்திரிகைக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தற்போது இலங்கையில் நல்லிணக்க காலப்பகுதி நிலவுவதாகவும் இனவாதத்தை எதிர்த்து இரண்டு தரப்பினரும் ஆரோக்கியமாக செயற்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணை ஒன்றை இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கரிசனை காட்டுவது குறித்து வட மாகாண சபை நியாயப்படுத்தப்படலாம். ஆனால் அவர்களினால் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றது என்று கூற முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் சர்வதேசத்தினரால் ஏற்றுக் கொள்ளக் கூடிய உள்நாட்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதாக, தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வட மாகாணத்தின் இவ்வாறான தீர்மானங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நன்றி - வீரகேசாி
நன்றி - வீரகேசாி
