கொழும்பு - இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை சில மாதகாலம் தாமதப்படுத்துமாறு கோருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் வைத்து றொய்டர்ஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த கால அவகாசம் கோரப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் ஏற்கனவே பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
தற்போது வொசிங்டன் சென்றுள்ள அவர், பெரும்பாலும் இன்றைய தினம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவர் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த அறிக்கை தாமதிக்கப்படாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
