கொழும்பு -
தனியாருக்குச் சொந்தமான சர்ச்சைக்குள்ளாகியுள்ள எவன்காட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலை, ரக்ன லங்கா ஆயுதக்களஞ்சியசாலை ஆகியவற்றிற்கு தானே அனுமதியளித்ததாக முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று மிரிகானையில் உள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவின் உயர் அதிகாரிகளுக்கு அவர் அளித்த பூரண மற்ற வாக்குமூலத்திலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அது தொடர்பிலான குற்றப்புலனாய்வுப்பிரிவின் மேலதிக கேள்விகளுக்கு பதிலளிக்க கோத்தபாய ராஜபக்ஷ ஆவணங்களை சரிபார்க்க காலஅவகாசம் வேண்டுமென கோரியநிலையில் அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அந்த அவகாசம் முடிந்ததும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார். அந்த காலஅவகாசம் நிறைவுற்றதும் அவர் பதிலளிக்கத் தவறுவாரானால் தற்போதைக்குள்ள தகவல்களை வைத்து அவருக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியேற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜனவரி மாதம் காலிதுறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் நடத்திவரப்பட்ட எவன்காட் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலை காலி பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக சோதனை செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இரண்டாம் தொகுதியில் நடத்திவரப்பட்ட மற்றொரு தனியார் பாதுகாப்பு நிறுவனமான ரக்ன லங்கா ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்து அரச படைகளுக்கு சொந்தமான, யுத்த காலங்களில் பயன்படுத்தப்படும் சுயமாக இயங்கும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன இந்நடவடிக்கை கொழும்பு தெற்கிற்குப்பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து இவ்விரு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகள் கொண்ட விசேட குழுவிற்கு பாரப்படுத்தியதாக குறிப்பிட்டு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண அந்நிறுவனத்தாரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் அக்களஞ்சியசாலைகள் நடத்திவரப்பட்டமை உறுதிசெய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளை இது தொடர்பில் விசாரணை செய்ததாகவும் அதன்போது பாதுகாப்பு அமைச்சு அப்போதைய செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அனுமதிக்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டதாகவும் அதனைத்தொடர்ந்து கோத்தபாய ராஜபக் ஷவை குற்றப்புலனாய்வு பிரிவு விசாரித்ததாகவும் அஜித் ரோகண சுட்டிக்காட்டினார். இதன்போது குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு பூரணமற்ற வாக்குமூலம் ஒன்றினை அளித்துள்ள கோத்தபாய ராஜபக் ஷ அதில் தான் அவ்விரு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் அனுமதியளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என அஜித் ரோகண மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் கோத்தபாயவின் விவகாரத்தில் குற்றப்புலனாய்வு பிரிவு விசேட சலுகைகளை அவருக்கு வழங்குகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 11 ஆவது அத்தியாயத்திற்கும் 110ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ளும் பொலிஸாரின் உரிமை தொடர்பிலான விடயத்திற்கும் உட்பட்டு சாதாரண விசா ரணை நடைமுறையில் கோத்தபாய ராஜ பக் ஷவின் விவகாரத்திலும் பின்பற்றப்படு வதாக சுட்டிக்காட்டினார்.
Source - Virakesary
.jpg)