தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேறிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும். யாருடைய தேவைக்காகவும் நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயார் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
20 ஆவது திருத்தம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் முரண்படவேண்டிய அவசியம் இல்லை. யார் எதிர்த்தாலும் அதனை நிறைவேற்றியே தீருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வாராந்த அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ் வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது;
பாராளுமன்றம் கலைக்கப்படுவதை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் சில முக்கிய வேலைத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த நாம் மிகவும் போராடினோம். எமது உயிர்களை பணயம் வைத்து மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினோம். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் நாம் தீர்மானம் எடுத்து அதை செய்து முடித்துள்ளோம்.
அதேபோல் நாம் தீர்மானித்த இரண்டாவது முக்கிய விடயமான தேர்தல் முறைமை மாற்றத்தையும் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் முறைமை மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் கடந்த காலத்தில் இருந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் முன்னைய எந்த அரசாங்கமும் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு விரும்பவில்லை.
ஆனால் எமது ஆட்சியிலாவது சரியான மாற்றம் ஒன்றை கொண்டுவந்து நாட்டின் அரசியல் பாதையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிட வேண்டும். எனவே தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பார். எப்போது பாராளுமன்றம் கலைக்கப்படும் என்பது சரியாக குறிப்பிட முடியாது.
கேள்வி :-எனினும் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் அதிருப்தியில் உள்ளனவே ?
பதில் தேர்தல் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் இன்று தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் முரண்படும் எவரும் சிறுபான்மை மற்றும் கொள்கைவாதிகளின் தலைவர்கள் அல்ல. வெறுமனே கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையும் தலைவர்கள் என்ற வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட வேண்டாம்.
தேர்தல் திருத்தம் தொடர்பில் யோசனைகளை முன்வைத்த போது அனைவரதுகருத்துக்களையும் நாம் வினவினோம். நாம் முன்வைத்த யோசனைக்கு மாறாக மற்றைய யோசனைகளையும் கேட்டோம். மாற்றுக் கருத்துகளை முன்வைத்தால் மட்டுமே சரியான தீர்மானம் எடுக்க முடியும். ஆனால் மாற்றம் ஒன்றை விரும்பும் இவர்கள் அதற்கான யோசனையினை முன்வைக்க தயாராக இல்லை. இப்போது தீர்மானிக்கப்பட்டிருக்கும் தேர்தல் திருத்தச் சட்ட மூலமானது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே இதுவே சாதகமான தீர்மானமாகும்.
கேள்வி :- எனினும் ஐக்கிய தேசியக் கட்சியும் உங்களது தீமானத்தை ஆதரிக்கவில்லையே ?
பதில் :- அப்படி வெளிப்படையாக கூற முடியாது. ஆரம்பத்தில் அவர்கள் முரண்பட்டாலும் பின்னர் இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் அவர்களது ஆதரவை தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அமைச்சர்களது ஆதரவுடன் தான் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்து வர்த்தமானியில் அறிவிக்கப்படது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிப்பு என்று ஆணித்தரமாக கூற முடியாது.
கேள்வி :-பாராளுமன்றத்தில் 20க்கு எதிர்ப்பு வருமாயின் ?
பதில் :- அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. 19அவது திருத்தச் சட்டம் கொண்டுவந்த போது முந்திக்கொண்டு வாக்களித்தவர்கள் ஏன் 20ஐ கொண்டுவருவதில் பின்நிற்கின்றனர். ஏனெனில் 19 ஆவது திருத்தும் வேறு ஒரு தனி நபரது அதிகாரத்தை மட்டுமே பறிக்கின்றது. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் 20ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தத்தமது பலம் குறையும் நிலைமை வந்ததும் அதை எதிர்க்கின்றனர்.
எனவே இதை எதிர்க்கும் அனைவரும் சுயநலவாத அரசியல்வாதிகளேயாவர். இவர்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. 20ஐ கொண்டுவருவதால் அவர்களுக்கு மட்டும் அல்ல எமக்கும் பாதிப்பு உள்ளது. ஆனால் இப்போது தனி நபர்களது சுயநலத்தை கவனத்தில் கொள்ளாது சரியான மற்றதை ஏற்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் மட்டும் அல்ல ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தாலும் அதைப்பற்றி நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. நாம் பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவோம்.
கேள்வி :- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவே 20 கொண்டுவருவதாக சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனவே?
பதில் :- எமது கட்சியின் பலத்தை அதிகரிக்க மட்டுமே தேர்தல் முறைமை மாற்றம் கொண்டு வருவதாயின் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் ஏன் அன்று எம்முடன் கைகோர்த்தார்கள். ஜனாதிபதித் தேர்தலின்போது பிரதான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே நாம் களத்தில் இறங்கினோம். அவ்வாறு இருக்கையில் இன்று 20ஐ எதிர்க்கும் அனைவரும் அன்று எதற்காக எம்முடன் கைகோர்த்தனர். நாம் வாக்குறுதி கொடுத்ததை இன்று செய்து வருகின்றோம். கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.