எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறை இன்று 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன தெரிவித்தார்.
2015 பாராளுமன்ற தேர்தலுக்காக அஞ்சல் திணைக்களத்துக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை உரிய முறையில் சட்ட ரீதியாக நடத்துவதற்காக அஞ்சல் திணைக்களம் பாரிய கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதன்படி தேர்தல் நடத்துதல், வாக்குகளை எண்ணுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக சேவையாளர்களை நியமிக்கும் கடிதங்களை தாமதமின்றி ஒப்படைத்தல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் தேர்தலுக்காக அஞ்சலிடும் விஞ்ஞாபனங்களை ஒப்படைத்தல் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது சேவையாளர் தட்டுப்பாடு ஏற்படும்.
மேற்படி விடயங்களைக் கவனத்தில் கொண்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்கள் விடுமுறை பெறாமல் இருக்குமாறு அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.

