பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதான கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பெயர்கள் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு வழங்கப்படவில்லை.
தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக நியமிக்கப்படும் பிரதிநிதிகளின் பெயர்களை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்ப்பைப் பெற்றுள்ள கட்சிகளிடம் அதற்கான பெயர் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.
பாராளுமன்றத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய பாராளுமன்றத்தை செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக நிறுவப்படவிருந்த தகவல் கருமபீடம் திறக்கப்படும் திகதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் கருமபீடத்தை ஆகஸ்ட் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் திறப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல்கள் மற்றும் ஆவணங்களை விநியோகிப்பதற்காக திறக்கப்படவுள்ள தகவல் கருமபீடம் ஆகஸ்ட் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் திறக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலகுவாக பாராளுமன்றத்தினுள் பிரவேசிப்பதற்காக உறுப்பினர்கள் தமது தேசிய அடையாள அட்டை அல்லது தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வேறு ஆவணங்களை எடுத்துவர வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
