நுவரெலியா, கொத்மலை வெதமுல்ல லிஸ்லேண்ட் தோட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவில் புதையுண்டு 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பாரிய அனர்த்தத்தில் 7 வீடுகள் முற்றாக தரைமட்டமானதாகவும் மேலும் இரு வீடுகள் பகுதியளவு சேதத்துக்குள்ளாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மண்ணுக்குள் புதையுண்ட செல்லையா கணேசன் (55) என்பவரை பொதுமக்கள் மீட்டுள்ளதுடன் அவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களைச் சேர்ந்த 188 பேர் இறம்பொடை இந்துக்கல்லூரி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
