Featured Home (TOP)

Recent Comments

Tuesday, December 1, 2015

avathani Media Network

பாரிய மோசடியில் சிக்கியது போக்குவரத்துசபை

கடந்த காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2200 பேருந்துகள் தருவிக்கப்பட்ட போது 3080 மில்லியன் ரூபா மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சந்திரஜித் மாரசிங்க இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த காலத்தில் அசோக் லேலன்ட் நிறுவனத்தின் இருந்து 2200 பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் CIF விலை (COST INSURANCE AND FREIGHT) விலை 30,000 அமெரிக்க டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இலங்கைக்கு 40,000 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையிலேயே 2200 பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கமையே 3080 மில்லியன் ரூபா எங்கு சென்றது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரஜித் மாரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
Read More
avathani Media Network

கோத்தாவை காப்பாற்றிய இராணுவ அதிகாரி :கம்பி எண்ணும் சாத்தியம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரிய மோசடிகள், ஊழல்கள், அரச வளங்களின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலர், லசிலி டி சில்வாவே, மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலின் போது, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணியாளர்களை தேர்தல் பரப்புரை பணிகளில் ஈடுபடுத்தியது தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக பாரிய மோசடிகள், ஊழல்கள், அரச வளங்களின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஆணைக்குழுவினால், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணைகளின் போது, சாட்சியமளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முகாமையாளரான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர, தமது நிறுவனப் பணியாளர்கள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்று மறுத்து சாட்சியம் அளித்திருந்தார்.
ஆனால், அதே நிறுவனத்தின், கணக்காளரான லெப்.கேணல் காமினி சில்வா, தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்பட்ட லக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணியாளர்களின் உணவு மற்றும் குடிநீருக்காக ஆறரை இலட்சம் ரூபா செலவிடப்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து, மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்ச மீது தாம் அதிக மதிப்பு வைத்திருப்பதாகவும் அவரைப் பாதுகாக்கவே பொய்ச்சாட்சியம் அளித்ததாகவும், அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில், இவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதென ஆணைக்குழு கடந்த வாரம் முடிவு செய்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே  மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
Read More
avathani Media Network

வன்னியார் சதுக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் 200 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

(ஊடகப்பிரிவு - வன்னியார் சதுக்கம்)
வன்னியார் சதுக்கம் அமைப்பினால் மாணவர்களின் கல்வி; நடவடிக்கைகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்ஸஹிதா வித்தியாளயம் மற்றும் ஜேர்மன் நட்புறவுப் பாடசாலைகளைச் சேர்ந்த 200 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களைக் கொண்ட தொகுதியை வழங்கி வைக்கும் நிகழ்வு 30.11.2015 திங்கட்கிழமை வன்னியார் சதுக்கம் அமைப்பின்   தலைவர் எஸ்.எம். றகீப் அவர்களின் தலைமையில் நிந்தவூர் ஜேர்மன் நட்புறவுப் பாடசாலைகளையில் நடைபெற்றது.
இன்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம் சலீம், விஷேட அதிதிகளாக ஹபீம் வங்கி முகாமையாளர் ஏ.எல். அனவர்டீன், டீமா பிஸ்கட் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.சீ.எம் சுபைர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யூ.டீ.ஏ. பத்மசிறி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அத்தோடு அஸ்ஸஹீதா வித்தியாளய அதிபர் ஏ.எம் அன்வர், ஜேர்மன் நட்புறவு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எஸ்.எம் அன்வர் மௌலவி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பூரணத்துவமாண கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு, பெற்றாரை இழந்த மாணவ மாணவினருக்குப் புத்தகப் பைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அதிதிகள் தங்களது உரைகளில் 'காலத்தின் அவசரத் தேவையின் நிமித்தம் யாருக்கு இந்த உதவிகள் போய்ச் சேர வேண்டுமோ, அத்தகைய மாணவ மாணவிகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளமை நிந்தவூர் வரலாற்றில் முதல் முறை' என பிரஸ்தாபித்தனர். ஏனெனில் மாணவர்களைப் பொருத்தவரையில், அவர்களின் மனநிலையைப் பொருத்தவரை, அவர்களின் குடும்பநிலையை கணித்தவரை, எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது யாதெனில், குறித்த பாடசாலையை நோக்கி மாணவர்களின் வரவானது ஏனைய பாடசாலைகளை விடவும் அதிகமாக காணப்பட்டது. ஏனெனில் தினமும் வழங்கப்படும் காலையுணவே அதற்கு காரணமாகும்.
இந்த ஒரு உதாரணம்; போதும் அந்த மாணவர்களின் நிலையை உலகறியச் செய்வதற்கு. கற்பதற்கான தகுதியிருந்தும் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல், நாம் எல்லோரும் நமது நிலையை யோசித்துக் கொண்டிருந்ததால், கல்வியை இழந்த அந்தச் சமூகத்தின் நிலையை  சிந்தித்துக் கூட பார்க்க முடியாது.
கவிதைப் போட்டியில் மாவட்டமட்டத்தில் தெரிவாகி தேசிய மட்டத்திற்கு கொழும்பு தாமரைத்தடாகத்திற்கு சென்றுவந்தஜேர்மன் நட்புறவுப் பாடசாலையின் மாணவனை நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்??.எத்தனை மாலைகள் அவனின் கழுத்துக்களை அலங்கரித்தன??.. சிந்திப்போம் சகோதரர்களே..
இது ஒரு தூண்டலுக்கான பதிவே அன்றி பிரபல்யத்துக்கான பதிவு அல்ல, முடிந்தால் எம்மோடு இணையுங்கள். வறுமைப்பட்ட தேசத்தில் இருந்து உருவாக்கப்படும் ஒவ்வொரு கல்விமானும் கலங்கரை விளக்கமாக வாழ்ந்ததுதான் வரலாறு. அந்த வரலாற்றை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்ட ஒன்றாய் பயணிப்போம்- அல்லாஹ்வுக்காக மட்டும் கைகோர்ப்போம்.

(கல்வியில் எழுச்சியை நோக்கி வன்னியார் சதுக்கம்)

கற்பவனாய் இரு
கற்றுக் கொடுப்பவனாய் இரு
கற்பவனுக்கு உதவுபவனாய் இரு
நான்காமவனாய் இருந்துவிடாதே!..
(நபிமொழி)









Read More
avathani Media Network

சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி பாரிய விழிப்புணர்வு பேரணி

(ஜவ்பர்கான்)
சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி இன்று காலை மட்டக்களப்பு நகரில் எயிட்ஸ் நோய்க்கெதிரான பதாதைகளை ஏந்தியவாறு பாரிய விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது. 
மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் ஏற்பாடு செய்த இப்பேரணியில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார். மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எம்.றஹ்மான் தலைமையின் பேரணி ஆரம்பமானது.  வைத்தியர்கள், தாhதியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பேரணி திருமலை வீதி, முனைவீதி, பிரதான வீதி, மகாத்மா காந்தி வீதியூடாகச்சென்று மாநகர சபை மண்டபத்தை அடைந்தது. அங்கு விழிப்புணர்வு   கூட்டமும் இடம் பெற்றது.
virakesari.lk
Read More
avathani Media Network

அவன்ட் விவகாரத்தில் ஆதாரங்களுடன் சிக்கினார் கோதபாய

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதி சொலிசுட்டர் ஜெனரல் வசந்த நவரட்ன பண்டார, இந்த விடயத்தை சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ஸ மற்றும் நான்கு பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ஸ, அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிசாங்க சேனாதிபதி, நிறுவனத்தின் பணிப்பாளர் மஞ்சுள குமார யாபா, பாதுகாப்பு அமைச்சின் முனான்ள மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன, ரக்னா லங்கா நிறுவனத்தின் பாலித பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை இறக்குமதி செய்து வைத்திருந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகியன தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவன்ட்கார்ட் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் இந்தப் பரிந்துரைகளை செய்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம், ஆயுதச் சட்டங்கள், வெடிபொருள் சட்டங்கள் ஆகியனவற்றின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More
avathani Media Network

இலங்கையின் கிழக்குப் பகுதியில் பெருமளவில் காடுகள் அழிப்பு

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காடுகள் பெருன்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களினால் தொடர்ந்தும் சட்ட விரோதமாக அழிக்கப்படுவதாக மாகாண விவசாயம் மற்றும் கால் நடை அபிவிருத்தி அமைச்சர் கே. துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் மட்டும் பொலநறுவை மற்றும் அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த சிங்கள விவசாயிகளினால் சுமார் 6500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதை வனத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
இந்த சட்டவிரோத காடழிப்புக்கு ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் பின் புலம் இருப்பதாகவும் அவர் சந்தேகமும் வெளியிடுகிறார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெளி மாவட்ட சிங்களவர்கள் நெல் வேளாண்மை செய்கையிலும் சிறு தானியச் செய்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
 
காடுகள் அழிக்கப்படுவது சட்ட விரோதம் என வனத்துறையினரால் அந்த பகுதியில் பகிரங்கமாக அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
 
சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தாலும் அது திருப்தியளிப்பதாக இல்லை என்கின்றார் மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கம்.
 
மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய 25 சத வீத வனப் பகுதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனத்துறை உரியது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
காடுகள் சட்ட விரோதமாக அழிக்கப்படுவது தொடர்பாக மாகாண விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என்றும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தமக்கு உறுதி வழங்கியதாகவும் துரைராஜசிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

2ஆம் திகதி முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செமினார், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 2ம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி 2ம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு டிசம்பர் 17ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

வளிமண்டல தளம்பல்; நாடு முழுவதும் மழை

இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும், இதன்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகமான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் கடற்பகுதியில், வடமேல் திசையை நோக்கி பலமான காற்று வீசலாம் எனவும், இது மணிக்கு 20 – 40 கிலோமீற்றராக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More