(முஹம்மது நியாஸ்)
‘பெண்கள் சமுதாயத்தின் கண்கள்’, ‘ஒவ்வொரு
ஆணுடைய வெற்றிக்குப்பின்னாலும் நிச்சயமாக
ஒரு பெண் இருப்பாள்’ என்று வாயளவில் மாத்திரம் துதிபாடுகின்ற சடவாத சித்தாந்தங்களே
‘பெண்புத்தி பின்புத்தி’, ‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு’ என்றும்
பிற்போக்குத்தனமாக உளறிவைத்தன.
நவீன நாகரீகம் செவ்வாய்கிரகத்தை நோக்கி வீறு
நடைபோடுகின்றது என்று கூடி நின்று கொக்கரிகின்ற இந்த அறிவியல் யுகத்திலும் கூட
செவ்வாய் தோஷம் என்று ஒதுக்கிவைத்து திருமண வாழ்க்கை என்பது ஒரு கனவாகிப்போய்
கண்ணீரும் கம்பலையுமாக முதிர் கன்னிகளாகவே காலத்தை கழிக்கின்ற எத்தனையோ பாவப்பட்ட
பெண்களும் சமகாலத்தில் இல்லாமல் இல்லை.
பெண்குழந்தை பிறந்துவிட்டால் அக்குழந்தையின்
எதிர்காலத்தில் அதற்கான திருமணம், சீர்வரிசை, குடும்பரீதியான சுமை மற்றும் சமூகத்தின் இழிபார்வை(?) என்பவற்றால்
தாய்ப்பாலுக்கு பதிலாக கள்ளிப்பாலை புகட்டி பிறந்து சில நிமிடங்களிலே தனது
வாழ்க்கையை முடித்துக்கொண்ட பச்சிளம் பெண்சிசுக்களின் பரிதாபகரமான வரலாறுகளும்
இருக்கத்தான் செய்கின்றன.
கணவன் இறந்துவிட்டால் ஒரு வெள்ளை நிற சேலையை
அணிவித்து சமூகத்தில் ஒரு அபசகுனமான பிறவியாக அடையாளப்படுத்தி அவமானப்படுத்துவதும்
இன்னும் சில சமுதாயங்களில் இறந்துவிட்ட கணவனோடு சேர்த்து அவனது மனைவியும் கட்டை
ஏற்றப்படுகின்ற கொடுமையும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்தான் மதங்களின்
பெயரால் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனாலும் பெண் சுதந்திரம் என்றும் பெண்ணுரிமை என்றும்
சந்து பொந்துகளில் நின்று கூச்சலிட்டுக்கொக்கரிக்கின்ற சில
கவனயீர்ப்புப்போராளிகளுக்கு பெண்கள் மீது மதக்கோட்பாடுகளின் நிழலில் மேற்கொள்ளப்படுகின்ற
இவ்வாறான அடக்குமுறைகளும் சடவாத சித்தாந்தங்களால் பெண்ணினத்தை அடக்கியாள்கின்ற
மதரீதியான கோட்பாடுகளும் அவர்களுடைய பார்வையிழந்த கண்களுக்குத் தெரிவதில்லை. மாறாக
இஸ்லாமியப்பெண்களுடைய ஹபாயா ஆடையும் ஆண்-பெண் கலப்பை வெறுக்கின்ற இஸ்லாத்தின்
கோட்பாடுகளுமே அவர்களின் ஊனமுற்ற உறுப்புக்களுக்கு புலப்படுகின்றன.
இற்றைக்கு சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு
முன்னர் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அக்குழந்தையை ஷைத்தானுடைய சாபமாக
எண்ணிய சமுதாயத்தில், அவ்வாறு பிறந்த பெண்குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்த
காட்டுமிராண்டித்தனமான சாம்ராஜ்ஜியத்தில் பெண்களுடைய வாரிசுரிமை பற்றிப்பேசியது
இந்த தன்னிகரற்ற இஸ்லாமிய மார்க்கம்.
பெண் என்றாலே அவள் ஆண்களுடைய காம இச்சையை
தீர்த்துக்கொள்வதற்கான ஒரு போகப்பொருள் மாத்திரமே என்று வாழ்ந்து வந்த
சமுதாயத்தில் திருமணத்தின் போது மணப்பெண்ணிடம் கண்டிப்பாக விருப்பத்தை கோரவேண்டும்
என்று வாதிட்டு அதை கட்டாயச்சட்டமாக்கியது இந்த இஸ்லாம் என்ற தனித்துவமான
மார்க்கம்.
அழ்ழாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்,
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி
கூறப் பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்டதெனக் கருதிய
செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக்
கொள்வதா? அல்லது மண்ணில் இதை உயிருடன் புதைப்பதா?
என்று எண்ணுகிறான் கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் 16:58,59)
பெண் குழந்தை பிறப்பதென்பது ஒவ்வொரு மனிதனுக்கும்
அழ்ழாஹ் வழங்குகின்ற நற்செய்தி என்பதை இக்குர்ஆன் வசனம் விளக்குகிறது. அத்தோடு
தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதை ஒரு இழிவாகவும் சமூகத்தில்
கௌரவக்குறைவாகவும் நினைத்து அப்பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்து
கொலைசெய்து வாழ்ந்துவந்த, இப்போதும் கள்ளிப்பாலை ஊட்டி கொலை செய்து வருகின்ற சமுதாயத்திற்கு அழ்ழாஹ்
அதன் பாரதூரத்தையும் அப்பாவகாரியமானது எப்பேர்ப்பட்ட கொடூரச்செயல் என்பதையும்
கோடிட்டுக்காட்டுகிறான்.
ஒருமுஸ்லிமுக்கு நாளை மறுமையில் சுவர்க்கலோக வாழ்வை
தீர்மானிப்பதில் பெண்குழந்தைகளுக்கே வகிபாகம் உள்ளது.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண் குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை
பொறுப்பேற்று கவனமாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் கை விரல்களை இணைத்துக்
காட்டினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 5127)
மேலுள்ள நபிமொழியின் பிரகாரம் ஒருவர் இரண்டு பெண்
குழந்தைகளை பெற்று அக்குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு செயற்படுகிறாரோ அவர் மறுமை
நாளில் சுவர்க்கத்தில் நபி (ஸல்) அவர்களோடு ஒன்றாக அமர்ந்திருக்கின்ற
நற்பாக்கியத்தை பெறுவார் என்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம். ஒரு இஸ்லாமியனுக்கு
மறுமை நாளின் நற்பாக்கியத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக பெண் குழந்தைகளை அழ்ழாஹ்
ஆக்கியுள்ளான். பெண்குழந்தைகளுக்கு இவ்வுலகில் இதை விடவும் வேறு என்னதான் சிறப்பு
வேண்டும்?
இஸ்லாமிய மார்க்கத்தைத்தவிர வேறு எந்த சமயக்கொட்பாடுகளினால்தான் பெண்களுக்கு
இத்தகைய சிறப்பை கொடுத்துவிடமுடியும்?
1. வேதக்காரர்களில் ஒருவர் தமது சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட இறைத் தூதரையும்
இறுதித் தூதர் முஹம்மதையும் நம்பிக்கை கொண்டார்.
2. ஓர் அடிமை அழ்ழாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.
3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார்.
பிறகு அவளை அடிமைத்தளையிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டார்.
இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி: 97)
அடிமைப்பெண்கள் என்பவர்கள் மனிதர்களா என்ற அடிப்படை
உணர்வு கூட இல்லாமல் வாழ்ந்துவந்த மடமைத்தனமான சமுதாயத்தில் அந்த
அடிமைப்பெண்களுக்கும் கல்வியறிவை புகட்டி, ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து அதை மேன்மைப்படுத்தி அப்பெண்ணையே
மணமுடித்துக்கொண்டால் அவர் இரட்டை நன்மையை பெற்றுக்கொண்டார் என்று அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் அத்தாட்சிப்படுத்தினார்கள். ஒரு அடிமைப்பெண்ணுடைய விடயத்திலேயே
இஸ்லாமிய மார்க்கம் இந்த அளவிற்கு பொறுப்பையும் கண்ணியத்தையும்
வலியுறுத்துகின்றதென்றால் இஸ்லாமிய மார்க்கத்தை விடவும் உலகிலுள்ள வேறெந்த சமய
சித்தாந்தங்களும் சடவாதக் கோட்பாடுகளும் இதுபோன்ற உரிமைகளை பெண்களுக்கு
வழங்கிவிடமுடியாது.
மேலும் சமுதாயத்தில் ஒரு ஆண் நல்லவரா கெட்டவரா என்று
முடிவு செய்யக்கூடிய உயர்ந்தபட்ச உரிமையையும் அதிகாரத்தையும் இஸ்லாம் பெண்களுக்கே
கொடுத்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே!
உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே! (திர்மிதி: 1082)
ஒருவர் சமூகத்தில் எவ்வளவுதான் நல்லவராக
நடந்துகொண்டாலும் அவர் தன்னுடைய மனைவியிடத்தில் ஒரு நல்ல மனிதராக நடந்துகொள்ளாத
வரை அவர் ஒருபோதும் அழ்ழாஹ்விடத்தில் நல்ல மனிதர் என்ற ஸ்தானத்தை அடையமாட்டார்
என்பதை இந்த நபிமொழி இடித்துரைக்கிறது. இஸ்லாத்தில் ஆண்களுக்கே முதலிடம், கௌரவம், சிறப்பு எல்லாமே. பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு கை கட்டி, வாய்பொத்தி சேவகம் செய்யும்
அடிமைகள் மாத்திரமே என்று கூக்குரல் எழுப்புகின்ற கோடாரிக்காம்புகள் இந்த நபி
மொழிக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்.
மேலும் நபியவர்கள் கூறினார்கள்,
இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே.
பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல பெண்ணாவாள் (ஸஹீஹ்
முஸ்லிம்: 2911)
பெண்ணென்பவள் ஒரு தீண்டத்தகாத உயிரினம் என்றும்
அவ்வாறு தீண்டினாலும் அவள் ஆண்களுடைய காமபசிக்கு இரையாவதற்கு மாத்திரமே
தீண்டப்படவேண்டும் என்றும் வாழ்ந்துவந்த இன்னமும் வாழ்ந்து வருகின்ற ஜாஹிலிய்யா சமூகத்தவர்களுக்கு
இவ்வுலகில் ஒழுக்கமான பெண்களே பயனளிக்கும் சொத்துகள் என்று பெண்ணினத்தின் பெருமையை
வானளாவ உயர்த்திக்கூறிய இஸ்லாமிய மார்க்கத்தை இன்று சில மேலைத்தேய மேதாவிகள்
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூறிக்கூச்சல் இடுவது
எப்பேர்ப்பட்டதொரு நயவஞ்சகத்தனமாக இருக்கவேண்டும்?
மாத்திரமன்றி தொழில் என்றும் பொருளீட்டல் என்றும் ஒரு
ஆணுடைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் மிகப்பெரும் ஆறுதலாக இருப்பவள் அவனுடைய
மனைவிதான் என்றால் அதில் மிகையேதுமில்லை. ஆனால் பெண்கள் என்றால் அவர்கள் குழந்தை
பெற்றுத்தரும் இயந்திரங்கள் மாத்திரமே என்று நம்பி வந்த மடமையுகத்தில் அழ்ழாஹ்
தன்னுடைய திருமறையில் கூறுவதை பாருங்கள்.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை
உங்களுக்காகப்படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தி யிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:21)
ஒரு ஆணுடைய வாழ்க்கை பெண் துணையின்றி ஒருபோதும்
முழுமை பெறாதென்பதையும் ஒரு பெண்ணுடைய துணையின்றி எந்தவொரு ஆணாலும் முழுமையான
வாழ்க்கையை வாழ்ந்துவிடமுடியாதென்றும் பெண்ணினத்தின் அவசியத்தையும் அதன்
அனுகூலத்தையும் பறைசாற்றுகிறது இந்த அருள் மறை வசனம்.
அழ்ழாஹுத்தஆலா முழுமையான இறைவிசுவாசிகளுக்கு
முன்னுதாரணமாக இரண்டு பெண்களைத்தான் குறிப்பிடுகிறான். இறைவனுடைய திருப்திக்காக
தங்களுடைய சுகபோக வாழ்க்கைகளை துறந்து, தியாகம் செய்து சத்திய இஸ்லாத்தை உயிர்ப்பித்த முன்மாதிரிமிக்க நல்லடியார்களாக
இரண்டு பெண்களை அழ்ழாஹ் அவனுடைய அருள் மறையில் சிலாகித்துக்கூறுகிறான்.
"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்பு வாயாக!
ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என் னைக் காப்பாயாக! அநீதி
இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பா யாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அழ்ழாஹ்
முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
இம்ரானின் மகள் மர்யமையும் இறைவன் முன் உதாரணமாகக்
கூறுகிறான் அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம்.
அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும்
இருந்தார். (அல்குர்ஆன் 66:11,12)
பிர்அவுன் என்ற கொடுங்கோல் அரசனுடைய மனைவியாகவிருந்து
பின்னர் நபி மூஸா (அலை) அவர்களுடைய சத்தியப்பிரச்சாரத்தால் கவரப்பட்டு
இஸ்லாத்திற்கு புத்துயிரூட்டிய ஒரு முழுமையான பெண்ணாக ஆஸியா (அலை) அவர்களை அழ்ழாஹ்
சுட்டிக்காட்டுகிறான்.
மேலும் பல சிறப்புக்களும் தன்னகத்தே பொருந்திய
இறைத்தூதர்களில் ஒருவரான நபி ஈஸா(அலை) அவர்களுடைய தாயாராகிய மர்யம் (அலை)
அவர்களையும் அழ்ழாஹ் முஃமின்களுக்கு முன்மாதிரியாக அறிமுகப்படுத்துவது ஒட்டுமொத்த
பெண்ணினத்திற்கே கிடைத்த மிகப்பெரும் கௌரவமும் கண்ணியமும் அல்லவா...
இவ்வாறு இறைவனின் படைப்புக்களிலேயே பெண்ணினம்தான்
மிகச்சிறந்த படைப்பு என்று பெருமிதத்துடன் வாதிடுகின்ற இஸ்லாமிய மார்க்கத்தை அது
பெண்களை அடிமைப்படுத்துகிறதென்றும் பெண் சுதந்திரத்தை சிதைக்கிறதென்றும் முதலைக்கண்ணீர்
வடிக்கின்ற மேலைத்தேயவாதிகளும் சரி, அவர்களுடைய எலும்புத்துண்டுகளுக்கு அடிமைப்பட்டுப்போன இஸ்லாமிய சமூகத்திலுள்ள
சில கோடாரிக்காம்புகளும் சரி. ஒரு அடிப்படையான விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாம் ஒருபோதும் பெண்ணினத்தை அடிமைப்படுத்தவில்லை.
மாறாக அது பெண்களுக்கு அதிகபட்சமான கண்ணியத்தையும் கௌரவத்தையும் வழங்கி அவர்களை
பாதுகாக்கவே செய்கிறது.
மொடலிங் (Modeling) என்றும் இன்னபிற நிகழ்வுகளில்
வாயிலாகவும் தாய்மை என்ற உன்னதமான பொறுப்பையும் சிறப்பையும் தாங்கிநிற்கும்
பெண்ணினத்தை அந்நிய ஆடவர்கள் மத்தியில் காட்சிப்பொருளாக காண்பித்து அவர்களது
இடைகளுக்கும் தொடைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் இட்டு ரசிக்கின்ற வேசித்தனமான கலாச்சாரத்தை
இஸ்லாம் ஆதரிக்கவில்லை.
இஸ்லாம் கண்ணியமாக நடாத்துங்கள் என்று கட்டளையிட்ட
பெண்களை பெண் சுதந்திரம் என்னும் பெயரால் பகிரங்க அரங்கத்தில் அரைகுறை ஆடைகளுடன்
ஆடிப்பாடவிட்டு அவர்களுடைய அங்க அவயவங்களை காமக்கண் கொண்டு கண்டு ரசிக்கின்ற
கேவலமான நடைமுறைதான் பெண்ணினத்தின் சுதந்திரம் என்றால் அந்த கேடுகெட்ட கலாச்சாரம்
ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு தேவையில்லை.
இவ்வாறான அசிங்கமான அருவருக்கத்தக்க நடைமுறைகள்
ஒருபோதும் பெண்ணினத்தை கௌரவப்படுத்தாது. மாறாக கண்ணியமாக, கௌரவமாக
நோக்கப்படவேண்டிய பெண்கள் காமுகர்களுடைய விரசமான பார்வைக்கு இலக்காகி கடைசியில்
கற்பையும் இழந்து உயிரையும் பறிகொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான சூழலுக்கே
தள்ளப்படுவார்கள் என்பதை சமகலாத்தில் நாம் நிதர்சனமாகவே கண்டுவருகிறோம். ஆனாலும்
மனக்கண்கள் மரணித்துப்போன இந்த பெண்ணுரிமை கோஷதாரிகளும் வேஷதாரிகளும் இந்த
யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
இஸ்லாமிய மார்க்கமோ பெண்களுடைய உயிரையும் உயிரிலும்
மேலான கற்பையும் பாதுகாப்பதற்காகவே அவர்களுக்கு ஹிஜாப் என்ற ஆடைமுறையை அறிமுகம்
செய்கிறது. அதன் மூலம் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
ஆனால் மேலைத்தேய பிற்போக்கு சிந்தனையாளர்களும்,
பிணந்தின்னி ஊடகங்களும் இன்னும் அப்பிற்போக்குவாதிகளாலும் பிணந்தின்னிகளாலும்
விலைபேசப்பட்ட நமது சமூகத்திலுள்ள சில கோடாரிக்காம்புகளும் ஒன்றிணைந்து ஹிஜாப்
என்பது பெண்ணடிமைத்தனம் என்று அவலக்குரல் எழுப்பிவருவதை நாம் காண்கிறோம்.
ஹிஜாப் ஆடையைப்பார்த்து பெண்ணடிமைத்தனம் என்று
ஓலமிட்டு ஒப்பாரிவைக்கின்ற இப்பெண்ணினத்தின் காவலர்(?)கள் ஹிஜாப் ஆடையை துறந்ததால்
அமேரிக்கா, பிரான்ஸ், அவுஸ்த்திரேலியா மற்றும் மேலைத்தேய ஐரோப்பிய நாடுகளில்
வேலைத்தளங்களிலும் இன்னபிற இடங்களிலும் அந்நிய ஆண்களின் உணர்ச்சிகளை சுண்டியிழுத்த
எத்தனையோ பெண்கள் வயது வித்தியாசமின்றி அந்நிய ஆடவர்களால் தினந்தோறும் கற்பழிக்கப்படுகிறார்களே,
கொலை செய்யப்படுகிறார்களே அதுபற்றி இவர்கள் ஏன் மூச்சுக்கூட விடுவதில்லை?
ஆகவே இவர்கள் பெண்ணடிமைத்தனம் என்றும் பெண் சுதந்திரம்
என்றும் கூக்குரல் எழுப்புவற்தற்கான காரணங்கள் உண்மையிலேயே பெண்களை பாதுகாப்பதற்காக
அல்ல. மாறாக அரைகுறை ஆடைகளுடன் வாழ்ந்து கலாச்சார சீரழிவுகள் பலவற்றிலும்
ஊறித்திளைத்து கடைசியில் அது வெறுத்துப்போய் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தேடி
இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வீறுநடை போடுகின்ற மேலைத்தேய பெண்களின் விகிதாசாரம்
தற்போது பல மடங்குகளாக அதிகரித்துள்ளது.
மேலைத்தேயக் கலாச்சாரத்தின் மூலம் தங்களுக்கு
கிடைக்காத மன அமைதியும், சமுதாய கௌரவவும், கண்ணியமும் இஸ்லாம் என்ற வாழ்வியல்
நெறிக்குள் மாத்திரமே கிடைக்கும் என்பதை அவர்கள் நன்கறிந்து, உணர்ந்து ஹிஜாப் என்ற
பெண்ணினத்தின் பெருமையை நோக்கி படையெடுக்கிறார்கள். இது மேலைத்தேய
பிற்போக்குவாதிகள் சந்தித்த மிகப்பெரும் தோல்வி. அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள
தெம்பில்லாத மேலைத்தேய பிற்போக்குவாதிகள் இஸ்லாம் பெண்ணினத்தை
அடிமைப்படுத்துகிறதென நனைந்த ஆட்டை கண்டு ஓநாய்கள் அழுவது போன்று ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் இன்ஷா அழ்ழாஹ்.
அதேநேரம் அந்த மேலைத்தேய சிந்தனையாளர்களுக்கு ஒப்பாக
நமது சமூகத்தினுள்ளே இஸ்லாமிய பெயர்தாங்கிய சில கறுப்பாடுகளும் ஹிஜாப் என்பது
பெண்ணடிமைத்தனம் என்று கூக்குரலிட்டு மாற்றுமத சமூகத்தவர்களுக்கு மத்தியில்
இஸ்லாமிய மார்க்கத்தை தவறாக சித்தரித்துக் காட்டிக்கொடுக்கின்ற நடைமுறையினை நாம்
காண்கிறோம்.
இவர்களுடைய இந்த நயவஞ்சகத்தனத்தை இரண்டுகோணங்களில்
நோக்கலாம்.
ஒன்று: இந்த எட்டப்பர்கள் இஸ்லாமிய தாய் தந்தையர்களுக்கு
பிறந்திருந்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தை படித்து, விளங்கியுணர்ந்து
பின்பற்றவில்லை. மாறாக பரம்பரை, பரம்பரையாக, வாழையடி வாழையாகவே பின்பற்றி
வருகிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை அதன்
மூலாதாரங்களில் இருந்தும் கற்றறிந்த எந்தவொரு அறிவுள்ள மனிதனும் அது
பெண்ணினத்தை அடிமைப்படுத்துகிறதென்று வாதிடுவதற்கு எள்முனையளவும் முகாந்திரமில்லை.
எனவே இவர்கள் முதலில் இஸ்லாமிய மார்க்கத்தை சரியாகவும் தெளிவாகவும் படித்தறியாத
காரணத்தினால் அவ்வாறு மடத்தனமான வாதத்தை முன்வைத்து சமுதாயத்தை
காட்டிக்கொடுக்கிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
இரண்டாவதாக:
ஐரோப்பிய நாடுகளுக்கான குடியுரிமையும் பிரபல்யமும்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தேசிய, சர்வதேச மட்டத்தில் பிரபல்யமடையவேண்டுமாக
இருந்தால் அவர் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் ஒன்றை அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை
விமர்சித்துவிட்டால் போதுமானது. உடனே இலவு காத்த கிளிகள் போன்று இலக்கு
வைத்துக்காத்திருக்கின்ற பிணந்தின்னி ஊடகங்கள் அந்த விமர்சகருக்கு(?)ம் அவருடைய
விமர்சனத்திற்கும் ராஜ மரியாதையளித்து பிரபல்யப்படுத்தி உச்சிக்கொப்பில்
ஏற்றுவிடுவதை நாம் காணலாம்.
மேலும் அவ்வாறான விமர்சனங்கள் மேலைத்தேய இஸ்லாமிய
எதிர்ப்பாளர்கள் வரைக்கும் செல்கின்ற போது ‘நான் இஸ்லாத்தை விமர்சித்ததால்
என்னுடைய நாட்டில் எனக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால்(?) ஆபத்து, எனவே நான் உங்களுடைய
நாட்டில் குடியுரிமை பெறவேண்டும்’ என்று அபயக்குரல் எழுப்பி ஐரோப்பிய நாடுகளில்
வாழ்கின்ற தங்களுடைய நீண்ட நாள் கனவையும் இலட்சியத்தையும் அடைந்துகொள்வதே இந்த
கோடாரிக்காம்புகள் ஹிஜாப் ஆடைக்கெதிராக காட்டுக்கூச்சல் இடுவதன் இரண்டாவது
காரணமும் பிரதான நோக்கமுமாகும்.
எனவே இஸ்லாமிய மார்க்கமானது ஒருபோதும் பெண்களை அடிமைப்படுத்தவில்லை, மாறாக அது
பெண்ணினத்தை கௌரவப்படுத்தி அதிகபட்சமாக கண்ணியமளிகின்ற ஒரேயொரு வாழ்வியல்
நெறியாகவும் இருந்துவருகிறது என்பதே இஸ்லாத்தின் எதிரிகளால் கூட மறுக்கவோ மறைக்கவோ
முடியாத பேருண்மையாகும். மேலும் இன்றைய உலகில் பெண்களுக்கான உரிமையும்
சுதந்திரமும் என்று வெறும் வாயளவில் மாத்திரம் துதிபாடுகின்ற சில போலி
பெண்ணுரிமைவாதிகளின் வெகுளித்தனமான கோஷங்களுக்கு அப்பால் சென்று பெண்ணுரிமை
என்றால் அது எவ்வாறு இருக்கவேண்டும், அதன் தாற்பரியம் எனவென்பது குறித்து
ஒட்டுமொத்த உலகிற்குமே செயற்பாட்டுரீதியாக பிரத்தியேகப்பாடம் நடாத்துகின்ற ஒரேயொரு
சமயமாகவும் இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமே இருந்து வருகிறது என்பதை
புரிந்துகொள்வோம். ஏனையோர்களுக்கும் புரியும்படியாக உணர்த்துவோம்.